தமிழ்த் தாய் வாழ்த்தில் தவறிய ‘திராவிட நாடு’.. முதல்வரின் மலிவு அரசியல்..ஆளுநர் ரவி கொடுத்த விளக்கம்
சென்னை: சென்னை டிடி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விட்டுவிட்டு பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வரின் விமர்சனம் மலிவானது என கூறி இருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சென்னை சுவாமி சிவான்ந்தா சாலையில் உள்ள டிடி தொலைக்காட்சியில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டம் மற்றும் டிடி தொலைக்காட்சியின் தங்க ஆண்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பங்கேற்று பேசினார். முன்னதாக ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் இடையே திக்கித் திணறியதோடு, ”தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகளை விட்டுவிட்டு பாடினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரை திருப்தி படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு ’திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்நிலையில் முதல்வரின் விமர்சனம் மலிவானது என கூறி இருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கப் பதிவில்,”மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். #பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.
ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications