4 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசு பேருந்துகளுக்கு தடையா? தமிழக அரசு ஐகோர்ட்டில் முறையீடு!
சென்னை: 4 சுங்கச் சாவடிகளில், அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 276 கோயை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளதாக மதுரை கப்பலூர், சாத்தூர், எட்டுர்வட்டம், கயத்தாறு, சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வாகிக்கும் தனியார் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அந்த மனுவில், "சுங்கச்சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும். சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக வரும் 10ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சுங்கச்சாவடியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
போக்குவரத்து கழகங்களின் இந்த நடவடிக்கையால், பொது மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி அரசு அதிகாரிகள் இந்தப் பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு விரைவாகச் செயல்படவில்லை என்றும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகளை நிறுத்தி தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், அவர்களால் அதைச் செய்ய முடியாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ரூ.276 கோடி சுங்கக் கட்டண நிலுவையால் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நாளை (ஜூலை 10 ஆம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக நாளை நல்ல தீர்வுடன் வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் முறையீடு செய்த நிலையில், நாளை காலை மீண்டும் விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications