பணி வாய்ப்பு.. ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு நல்ல செய்தி! பள்ளிக்கல்வித்துறை கேட்ட முக்கிய விவரம்
சென்னை: கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க பணிக்காலத்தில் உயிரிழந்த ஆசிரியர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 58,000 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5.62 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில் கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்க பணிக் காலத்தில் உயிரிழந்த ஆசிரியர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பள்ளிக்கல்வித் துறையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான நியமன அலுவலராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இருக்கிறார்.
இந்த துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து 2024 செப்டம்பர் 1 முதல் 2025 ஜனவரி 31 ஆம் தேதி வரை உயிரிழந்த அல்லது மருத்துவக் காரணங்களால் ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் எவரின் பெயரும் விடுபடாதவாறு கையொப்பத்துடன் முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதவிர மாதந்தோறும் 10 ஆம் தேதிக்குள் அதற்கு முந்தைய மாதத்தில் உயிரிழந்த அல்லது மருத்துவக் காரணங்களால் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications