அவிநாசி, கோத்தகிரி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 7 ஊர்கள் நகராட்சிகளாக தரம் உயர்வு! அரசிதழில் வெளியீடு!
சென்னை: 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய நகரங்கள் புதிதாக நகராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்தது. தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைத்து வருகிறது தமிழ்நாடு அரசு.

நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டம் சங்ககிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய மூன்று தேர்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications