இரவு வந்த முக்கிய உத்தரவு! வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இன்று (ஜூன் 14) முதல் இயக்க தமிழக அரசு தடை விதித்து இருந்த நிலையில், இதற்கான கால அவகாசம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க இப்போது சுமார் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அவற்றில் சுமார் 550 ஆம்னி பேருந்துகள் வெளிமாநில பதிவு எண்களைக் கொண்டதாகும்.

முன்பு தமிழகத்தில் ஸ்லீப்பர் பேருந்துகளைப் பதிவு செய்ய முடியாத சூழல் இருந்தது. அப்போது இதுபோல வெளிமாநிலங்களில் பதிவு செய்து தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்கி வந்தனர்.
ஆம்னி பேருந்துகள்: இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகளையும் தமிழகத்திலேயே பதிவு செய்யும் வகையில் விதிகள் மாற்றப்பட்டன. இதையடுத்து பெரும்பாலான ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்கள் பேருந்துகளை தமிழ்நாட்டிலேயே பதிவு செய்து கொண்டனர். இருப்பினும், சிலர் மட்டும் இன்னும் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களையே இயக்கி வருகிறார்கள்.
வெளிமாநில பதிவு எண்: இதுபோல வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்குவதால் இங்குள்ள தமிழ்நாடு அரசுக்கும் போக்குவரத்துத் துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி வேறு மாநிலங்களுக்குச் செல்கிறது.. இதையடுத்து வெளிமாநில ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும், வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை உடனடியாக தமிழகத்தில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இதற்கான கால அவகாசமும் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது.
நீட்டிப்பு: இதற்கிடையே இன்று ஜூன் 14ஆம் தேதி முதல் வெளிமாநில ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க தமிழக அரசு தடை விதித்தது. கால அவகாசத்தை நீட்டிக்க முதலில் நடந்த பேச்சுவார்த்தையிலும் பலன் கிடைக்காத நிலையில், வெளிமாநில பதிவு எண் கொண்ட 550 ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது.. இதற்கிடையே மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் வரும் திங்கட்கிழமை வெளிமாநில பதிவு எண்களைக் கொண்ட பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
வார விடுமுறை, பக்ரீத் பண்டிகையைக் கருத்தில் கொண்டு இந்த கால அவகாசம் நீட்டிப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் திங்கட்கிழமைக்குப் பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளைத் தமிழகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications