முதுமலை யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு அரசு வேலை.. பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் பராமரிப்பாளராக பெள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பெள்ளிக்கு வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து அப் படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இந்த விருதினை பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகில் முதல் விருது பெற்ற ஆவண திரைப்படம் என்ற சாதனையும் இந்த படம் படைத்தது.

ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வருகை புரிந்து 2 பேரையும் பாராட்டினார். தொடர்ந்து நாடு முழுவதும் பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பொம்மன், பெள்ளி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து பாராட்டு கேடயமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர்கள் கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த மாதம் 18ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பொம்மன், பெள்ளி சந்தித்து பாராட்டுகள் பெற்றனர். இதனிடையே ஆகஸ்ட் 5ஆம் தேதி திரெளபதி முர்மு முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு வர உள்ளார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு பகல் 2.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு 3.45 மணிக்கு வருகிறார். தொடர்ந்து முதுமலையில் உள்ள பொம்மன், பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பெள்ளிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் பராமரிப்பாளராக பெள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை பெள்ளிக்கு வழங்கினார்.












Click it and Unblock the Notifications