"இன்னும் 18 மாசம்.." இனி சென்னை ஈசிஆரில் சல்லுனு பறக்கலாம்.. மொத்தமா மாற போகுது! ஆஹா சூப்பர்
சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் ஒன்றை அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான பணிகளை மிக விரைவில் தொடங்க உள்ள தமிழ்நாடு அரசு அடுத்த 18 மாதங்களில் இதை முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாக ஈசிஆர் இருக்கிறது. இந்த சாலையில் பல ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில், இந்த சாலையைக் கடந்து செல்லவே நீண்ட நேரம் ஆகும்.

இதன் காரணமாக இங்கே திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் ஒன்றை அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.
18 மாதம்: இந்த திட்டம் நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு இதில் இப்போது கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் இந்த மேம்பாலத்தைக் கட்டி முடிக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இரு ஒரு பக்கம் இருக்க திருவான்மியூரில் இருந்து அக்கரை வரையிலான 8.8 கிமீ நீளச் சாலை விரிவாக்கப் பணிகளையும் துரிதப்படுத்தி 2025 ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 15 கிமீ தூரத்ததைக் கடக்க இப்போது சுமார் 40 நிமிடங்கள் வரை ஆகிறது. பீக் ஹவரில் இன்னுமே தாமதம் ஆகிறது. ஆனால், இந்த வரையிலான மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தால் சில நிமிடங்களில் செல்ல முடியும். அங்கே டைடல் பார்க்கில் தொடங்கும் இந்த மேம்பாலம் எல்பி ரோடு சந்திப்பு, கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் அக்கரை போன்ற முக்கிய இடங்களைக் கடந்து உத்தண்டியில் முடிவடைகிறது.
முக்கிய இடங்கள்: மேலும், எல்பி சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் மற்றும் நீலாங்கரை பகுதி மக்களும் இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்தும் வகையில் அங்கெல்லாம் ரேம்ப் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டால் வெறும் 20 நிமிடத்தில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி செல்ல முடியும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்க பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ஈசிஆர் பல முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது. இதை ஆறு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய ஏற்கனவே திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய ஆறு இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்கள்: இந்த ஈசிஆர் பாதையில் பல ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால் ஈசிஆர் சாலை எப்போதும் நெரிசல் மிக்கதாகவே இருக்கிறது. குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது. இந்த சாலை விரிவாக்கம் போக்குவரத்து நெரிசலைச் சற்று குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.940 கோடி செலவில் நடக்கும் இந்த விரிவாக்க பணிகள் நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் இந்த பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகள்: இப்போது சாலை விரிவாக்க பணிகள் மட்டுமின்றி, இரு மார்க்கங்களுக்கு நடுவே மீடியன் அமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால் அமைப்பு ஆகியவையும் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மின்சார துறைக்குச் சொந்தமான உபகரணங்களை இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அது முடிந்ததும், சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாளச் சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கும். அதன் பிறகு சாலை விரிவாக்கம் பணிகள் நடக்கும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பணிகளை முடிக்கவே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications