சத்தமில்லா பட்டாசு.. மாசற்ற தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுங்கள்.. தமிழக அரசு வேண்டுகோள்
சென்னை: குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க மக்கள் கடைவீதிகளில் அலைமோதுகின்றனர். விதவிதமான இனிப்புகள், ரகம் ரகமான பட்டாசுகள் கடைவீதிகளில் குவிந்துள்ளன. பேன்சி ரக பட்டாசுகளை வாங்கவே பொதுமக்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலையில் 2 மணி நேரம், இரவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள். வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தண்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் 7 உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications