தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் ஐ.பி.எஸ்.! மதுரைக்காரரின் மாஸ் பின்னணி என்ன தெரியுமா?
சென்னை: தமிழக உளவுத்துறை ஐ.ஜி.ஆக பொறுப்பேற்றுள்ள செந்தில் வேலன் ஐ.பி.எஸ். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார்.
உளவுத்துறை ஐ.ஜி. பதவியை பொறுத்தவரை, முதலமைச்சரோடு எந்நேரம் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசகூடிய ஒரு மிகப்பெரும் பதவியாக கருதப்படுகிறது.
இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள செந்தில் வேலன் ஐ.பி.எஸ். பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.

மதுரை பூர்வீகம்
தமிழக உளவுத்துறை ஐ.ஜி.செந்தில் வேலனுக்கு மதுரை தான் பூர்வீகம். சிறுவயதில் இருந்தே காவல்துறையில் உயரதிகாரியாக வர வேண்டும் என விரும்பிய செந்தில் வேலன், தனது தந்தையின் விருப்பத்திற்காக எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவர் ஆனார். டாக்டராகிய பிறகு கிளினிக் வைப்பார் அல்லது மருத்துவ மேற்படிப்பு படிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். ஆனார். 2004-ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஏ.எஸ்.பி.யாக காவல்துறை பணியை தொடங்கினார்.

சாதிக் கலவரங்கள்
சாதிக் கலவரங்களை மிக சாதுர்யமாக கையாண்டு பிரச்சனைகளை தீர்ப்பதில் கெட்டிக்காரராக திகழ்ந்தார். அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார். பிறகு பதவி உயர்வு மூலம் தஞ்சை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்ட செந்தில் வேலன், அந்த மாவட்டத்தில் ரவுடிகளின் ராஜ்யத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம்
இதனிடையே மீண்டும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அவர் 2011-ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணம் ஊழல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் சும்மா இருக்கவில்லை, மதுரை கிரானைட் வழக்கில் துரிதமாக செயல்பட்டு முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டினார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு பணிக்கு சென்ற செந்தில்வேலன் ஐ.பி.எஸ். கடந்த 2018-ஆம் ஆண்டு டி.ஐ.ஜி.ஆக பதவி உயர்வு பெற்றார்.
Recommended Video

ஐ.ஜி.ஆக பதவி உயர்வு
2020-ஆம் ஆண்டு ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற செந்தில் வேலன் ஐ.பி.எஸ்., அண்மையில் தான் தமிழக காவல்துறைக்கு மீண்டும் திரும்பினார். அப்போதே இவருக்கு முக்கியப் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் இப்போது தமிழக உளவுத்துறை ஐ.ஜி.ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற போதே மத்திய உளவுத்துறை விருதான பேட்டன் மற்றும் ரிவால்வர் விருதுகளை பெற்றவர் செந்தில்வேலன் ஐ.பி.எஸ். என்பது கூடுதல் தகவலாகும்.












Click it and Unblock the Notifications