இடைக்கால பட்ஜெட்டில் மக்களை கவரும் அறிவிப்புகள்.. தமிழக சட்டசபையில் எப்போது தாக்கல்?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அதாவது இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐந்து ஆண்டு ஆட்சியில் கடைசி பட்ஜெட் ஆகும்.

ஆனால் இது முழுமையான பட்ஜெட் கிடையாது. இடைக்கால பட்ஜெட் மட்டுமே 2026 ஜூன் மாதத்தில் பதவியேற்கும் புதிய அரசே ஜூலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரும் என்கிற நிலையில், அதுபற்றி விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
தற்போது தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கி உள்ளது. முதல் நாளான 20-ந்தேதி கவர்னர் உரை நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தார்கள்.
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அவர்களுக்கு கடந்த 24-ந்தேதி பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைத்தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டசபை அலுவல்கள் தள்ளிவைக்கப்பட்டுவிட்டன. தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது
மக்களை கவரும் அறிவிப்புகள்
தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.குறிப்பாக மகளிர் உரிமை தொகை, இலவச வீடு, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, முதியோர் உதவி தொகை, பல ஆண்டுகளாக சில நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது, மின் கட்டண சலுகை, கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஏதாவது சலுகை அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
பட்ஜெட் எப்போது
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இல்லாதபட்சத்தில் பிப்ரவரி 3-ம் வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் அவையை நடத்தி முடிக்கலாமா? என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications