ராமர்தான் நம் கொள்கை.. சனாதன தர்மம் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது.. ஆளுநர் ரவி மீண்டும் பரபர பேச்சு!
சென்னை: சனாதனம் தெற்கில் இருந்துதான் உருவானது என்பதை மறக்க வேண்டாம், சனாதன தர்மம் முக்கியமாக தமிழ்நாட்டில்தான் தொடங்கியது, இந்த ஒட்டுமொத்த உலகத்திற்கும் கலாச்சாரத்தை சொல்லிக்கொடுத்தது இந்தியா என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீது பல்வேறு விஷயங்களில் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு ஆளுநர் ஆர். என் ரவிக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
ஆளுநர் ஆர். என் ரவிக்குக்கும் - முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டு தரப்பும் பல்வேறு விஷயங்களில் கடுமையான மோதி வருகின்றன.

பதவி நீக்கம்
இந்துத்துவா குறித்தும், சனாதனம் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசுவது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் எம்பி வில்சன் ஆளுநரை நீக்க தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார்.

ஆளுநர் உரை
இந்த மோதல் தற்போது சட்டசபையிலேயே மோதிக்கொள்ளும் அளவிற்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று முதல்நாள் தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.

மீண்டும் சர்ச்சை
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழா தற்போது இசை கலைஞர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இதற்காக தற்போது விழா எடுக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பிரபலங்கள் இந்த விழாக்களில் பேசி வருகின்றன. இன்று நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர். என் ரவி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர் .

இந்து மதம்
இந்த நிகழ்வு இசை விழாவாக இருந்தாலும், அரசியல் ரீதியாகவும் இதில் ஆளுநர் தனது தனிப்பட்ட கொள்கைகளை பேசினார். அவர் தனது பேச்சில், இந்தியாவின் ஆன்மீக அடையாளம் ராமர். இந்தியாவை இணைத்தது ராமர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராமர்தான் இந்தியாவை ஆன்மிகம் மூலம் இணைத்தார். இந்த நாட்டை ஒன்றும் ஆட்சியர்கள் உருவாக்கவில்லை. வலிமைமிக்க ஆட்சியர்கள் இணைந்து ஒன்றும் இந்த நாட்டை உருவாக்கவில்லை. இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து துறவிகள், ரிஷிகள், முனிவர்கள் சேர்ந்துதான் உருவாக்கினார்கள்.

என்ன சொன்னார்?
நாம் எல்லோரும் ஒரே பாரதம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்த பாரதம் சனாதன தர்மத்தால் இயங்கி வருகிறது. இந்தியா இணைந்தது சனாதன தர்மத்தால் மட்டும் சாத்தியம் ஆனது. இந்தியா பக்திமயமான நாடு. இதில் இசையும் ஒரு சக்தி மிக்க பக்தி என்பதை மறக்க கூடாது. இந்த பாரத நாடே ராமரை விரும்புகிறது. நமது நாடு புண்ணிய பூமிகளால் கோர்க்கப்பட்டது. திருவையாறு இப்போதும் கூட புண்ணிய பூமியாக விளங்குகிறது. இந்தியா ரிஷிகளால் உருவாக்கப்பட்ட நாடு என்று சொன்னேன். இந்தியாவை உருவாக்கிய அந்த ரிஷிகளில் ஒருவர்தான் தியாகராஜர்.

இந்தியா மொழி
இந்தியாவை உலக நாடுகள் முன்னணி நாடாக பார்க்கிறது. இனியும் இந்தியா மூன்றாம் தர நாடு கிடையாது. இந்தியா இந்த உலகத்தின் விஸ்வகுருவாக மாறி உள்ளது. சனாதன தர்மம் என்பது மற்றவரின் நம்மை காணப்பது. இந்த சனாதனம் தெற்கில் இருந்துதான் உருவானது என்பதை மறக்க வேண்டாம். சனாதன தர்மம் முக்கியமாக தமிழ்நாட்டில்தான் தொடங்கியது. இந்த ஒட்டுமொத்த உலகத்திற்கும் கலாச்சரத்தை சொல்லிக்கொடுத்தது இந்தியா. ஆன்மீகத்தின் தலைமையிடமாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் இதயமாக வேதங்கள் இருக்கின்றன, என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications