நாங்க தான் எதிர்க்கட்சி..நாங்களும் வருவோம்! முதல்வருக்கு போட்டியாக களமிறங்கும் எடப்பாடி! என்னாச்சு?
சென்னை : தமிழகத்தில் வழக்கம் போல் வடகிழக்கு பருவமழை தனது வேலையை காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதை அடுத்து தமிழக எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும் சென்னையில் இன்று ஆய்வு நடத்த இருப்பதாக அதிமுகவினர் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று பல மாவட்டங்களில் விடாமல் மழை கொட்டியது. இன்று முதல் படிபடியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறினாலும் நாளை வரை மழை பெய்யும் எனவும் கூறியிருக்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இன்னும் தீவிரமடைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை
வழக்கம் போல் வடகிழக்குப் பருவமழை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. கடலூரில் மழை நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் பாரதி சாலை பகுதியில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதேபோல் மயிலாடுதுறையிலும் மழையால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

முதல்வர் ஆய்வு
சீர்காழியிலும் கனமழை காரணமாக குறிப்பிட தகுந்த அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து களத்தில் இறங்கியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தற்போது கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 15,000 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். தற்போது அங்கு மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். கடலூர், பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக பார்வையிட்ட அவர் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதோடு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தமிழக அமைச்சர்களும் முதல்வரும் கண்டு கொள்ளவில்லை என எடப்பாடி பழனிச்சாமி நேற்று காட்டமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார். ஆனால் தமிழக அமைச்சர்களான செந்தில் பாலாஜி, மெய்யநாதன், கேஎன் நேரு உள்ளிட்டோர் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை களத்தில் இறங்கி பணியாற்றி வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்தது. இதையடுத்து நாங்களும் எதிர்க்கட்சி நாங்களும் களத்தில் இறங்குவோம் என அதிரடியாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

சென்னையில் ஆய்வு
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று சென்னையில் நேரில் ஆய்வு செய்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய இருப்பதாகவும், சென்னை ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications