3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
சென்னை: வரும் 14-ம் தேதி கூடும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை 3 நாட்கள் மட்டுமே நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 14-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் 16-ம் தேதி புதன்கிழமையுடன் நிறைவடைய உள்ளது.
இதனிடையே குறைந்தது 5 நாட்களுக்காவது சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

கலைவாணர் அரங்கம்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி விவாதிக்க சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக சார்பில் துரைமுருகன், சக்கரபாணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

7 அல்லது 5 நாட்கள்
இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், 3 நாட்களில் ஒரு நாள் மறைந்த முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும்.

எதை பேசுவது
எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் எதை பற்றி பேச முடியும், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசவேண்டும், கல்விக்கொள்கை குறித்து பேச வேண்டும், கொரோனா பாதிப்பு பற்றி பேசவேண்டும். இப்படி இன்னும் பல முக்கிய விவகாரங்கள் பற்றி பேச வேண்டியது இருப்பதால் அவையை 7 நாட்களுக்கு நடத்தலாம் எனக் கூறினேன். சபாநாயகர் முடியாது எனக் கூறிவிட்டதால் 5 நாட்களுக்காவது நடத்தலாம் எனத் தெரிவித்தேன். ஆனால் அதற்கும் மறுத்துவிட்டார்.

எதற்கு அழைத்தார்கள்?
எங்கள் கோரிக்கையை செவிமடுக்கவே இல்லை, சும்மா ஒப்புக்கு எங்களை அழைத்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி ஏற்கனவே எடுத்த முடிவை வெளியிடுகிறார் சபாநாயகர் எனத் தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், சட்டமன்றம் வழக்கம் போல் காலை 10 மணிக்கு கூடும் என்றும் கேள்வி நேரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications