ஜூன் 24ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்.. தேதி குறித்த சபாநாயகர் அப்பாவு.. எத்தனை நாட்கள் நடக்கும்?
சென்னை : ஜூன் 24ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.12ஆம் தேதி நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க தொடங்கிய போது, சட்டப்பேரவை தொடங்கும் முன்பும், முடியும் போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் ஆளுநர் உரையில் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இருந்ததாகவும் கூறி ஆளுநர் உரையை வாசிக்க மறுத்துவிட்டார். இதன்பின் சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் உரையை வாசித்து முடித்தார். இதன் அடுத்த நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 2024 -2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் பொது விவாதம் நடைபெற்று முடிந்தது. ஆனால் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கவில்லை. ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி இருக்கிறேன்.
அன்றைய தினம் முதல் எத்தனை நாட்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்க வேண்டும், எந்தெந்த தேதியில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க வேண்டும் என்பது அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதனை ஜூன் 24ஆம் தேதிக்கு முன்பாகவே ஒரு தேதியில் முடிவு செய்வோம் என்று தெரிவித்தார். இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் 25 நாட்களுக்கு மேல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications