நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - நாகர்கோவில் மாநகராட்சியை கேட்கும் பாஜக..கொடுக்குமா அதிமுக.. ஆலோசனை
நகர்புற உள்ளாட்சித்தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. பாஜகவினர் வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை: நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைத் தலைமையில் அக்கட்சியினர் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 4ஆம் தேதி, மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

பலமுனைப்போட்டி
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் உள்ளது. தேமுதிக, பாமக, மநீம, நாம் தமிழர், அமமுக என பல கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாகவே கூறி வருகிறது.

தேர்தல் வியூகம்
உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய சில நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் வெற்றிக்கான வியூகம் வகுப்பது குறித்தும் எந்த மாநகராட்சிகளை யாருக்கு கொடுப்பது?எத்தனை கவுன்சிலர் இடங்களை கேட்டுப்பெறுவது என்பது பற்றியும் அரசியல் கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர்.

அண்ணாமலை தலைமையில் ஆலோசனை
சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக உறுப்பினர்கள் பரபர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை இடங்களை கேட்டுப்பெறுவது என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது, அதிமுகவிடம் நாகர்கோவில், சிவகாசி மாநகராட்சிகளை கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கவுன்சிலர் தொகுதிகளில் எத்தனை இடங்களில் வலுவாக இருப்பது பற்றியும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

4 எம்எல்ஏக்கள்
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக போட்டியிட்டது. இதில் கோவை, நாகர்கோவில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுகவுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிற நாகர்கோவில், கோவை மற்றும் சேலம் மாநகராட்சிகளில் அதிக இடங்களில் கவுன்சிலர் தொகுதிகளில் போட்டியிடலாமா என்பது பற்றி பாஜகவினர் ஆலோசித்து வருகின்றனர்

சிவகாசி கிடைக்குமா
நாகர்கோவில் மாநகராட்சியை வெல்வது என்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என்று திமுகவே உணர்ந்துள்ளது.ஆனால், பாஜக அதிமுக நாகர்கோவிலில் வலிமையாக உள்ளது. நாகர்கோவில் சட்டசபைத் தொகுதியில் ஏற்கனவே பாஜகவின் காந்தி எம்எல்ஏ வெற்றிக்காக முனைப்பாக போராடுவார் என்பதால் அந்த மாநகராட்சியின் மீது கண் வைத்துள்ளது பாஜக. அதே போல சிவகாசி மாநகராட்சியின் மீதும் குறி வைத்துள்ளது பாஜக. 21 மாநகராட்சிகளில் இந்த இரண்டு மாநகராட்சிகளை குறிப்பிட்டு அதிமுகவிடம் கேட்டுள்ளதாம் பாஜக. இந்த இடங்களை தர அதிமுக சம்மதிக்குமா என்பது அதிமுகவின் ஆலோசனைக்குப் பின்னர் தெரியவரும்.












Click it and Unblock the Notifications