கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படி வாக்களிக்கலாம்.. முழு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது

மொத்தம் 12,838 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த முறை தமிழகத்தில் பல முனை போட்டிகள் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கடந்த சட்டசபைத் தேர்தலில் இருந்த அதே கூட்டணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்கிறது. அதேநேரம் கடந்த சட்டசபைத் தேர்தலை ஒன்றாக எதிர்கொண்ட அதிமுக, பாமக, பாஜக இந்த முறை தனித்தனியாகக் களமிறங்குகிறது. இவை தவிர தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், கொரோனா நோயாளிகள் மாலை 5-6 மணி வரை வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சான்றிதழைக் காட்டி வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் பிபிஇ உடைகளை அணிந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் அலுவலர்களும் மாலை 5-6 வரை பிபிஇ உடைகளை அணிந்து, கொரோனா நோயாளிகளிடம் இருந்து வாக்குகளைப் பெறுவார்கள். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் சமயத்திலும் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications