அட "சூட்சமம்" இதுதானா.. அத்தனை பேரூராட்சிகளை பாஜக கைப்பற்றியது எப்படி தெரியுமா? இனிமேதான் சிக்கலே!
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி திமுக அசத்தி உள்ளது.
அதேபோல் 80 சதவிகித நகராட்சி வார்டுகளை கைப்பற்றி உள்ளது. ஊரக உள்ளாட்சியிலும் திமுகதான் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது.
இந்த நிலையில் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கூடுதலான இடங்களை அக்கட்சி பெற்றுள்ளது. அதோடு சில இடங்களில் வார்டுகளையும் வென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

பாஜக மலர்ந்துவிட்டது
தமிழ்நாட்டில் பாஜக மலர்ந்துவிட்டது. மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்று அக்கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று பேட்டியும் அளித்தார். ஆனால் புள்ளி விவரங்களை பார்க்கும் போது பாஜகவை தமிழ்நாடு மொத்தமும் மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1369 மாநகராட்சி வார்டுகளுக்கும், 3824 நகராட்சி வார்டுகளுக்கும், 7407 பேரூராட்சி வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

பாஜக இடங்கள்
இதில் பாஜக பெற்ற இடங்கள் என்று பார்த்தால் 22 மாநகராட்சி வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 56 நகராட்சி வார்டுகளை பாஜக வென்றுள்ளது. மேலும் 230 பேரூராட்சி வார்டுகளை வென்றுள்ளது. எண்கள் அடிப்படையில் பார்த்தால் அதிகம் போல தெரிந்தாலும் சதவிகித அடிப்படையில் இது மிக மிக குறைவு ஆகும். மாநகராட்சியில் மொத்தமாக பாஜக 1.60 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது. நகராட்சியில் பாஜக 1.46 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது.

மொத்த பாஜக சதவிகிதம்
மொத்தமாக பாஜக 3.26 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது. இது போக பாஜக அதிகமான இடங்களை கன்னியாகுமரியில் மட்டுமே பெற்றுள்ளது. உதாரணமாக பாஜக வென்ற 22 மாநகராட்சி வார்டுகளில் 11 நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து வந்தது. அதேபோல் நகராட்சி வார்டுகளில் 56ல் பாஜக 21 வார்டுகளை கன்னியாகுமரியில் உள்ள நகராட்சிகளில் இருந்து பெற்றுள்ளது. இதெல்லாம் போக பேரூராட்சியில் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக பேச்சுக்கள் எழுகின்றன.

குமரி மாவட்டம்
ஆனால் பாஜக வென்ற 230 பேரூராட்சி வார்டுகளில் 168 மொத்தமாக கன்னியாகுமரில் இருந்து வந்தது ஆகும். அதாவது கன்னியாகுமரியில் மட்டும் பாஜக 168 பேரூராட்சிகளை வென்றுள்ளது. மாறாக குமரி தவிர்த்து தமிழ்நாடு முழுக்கவே வெறும் 62 பேரூராட்சிகளை மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது. அதோடு நாகர்கோவில் மாநகராட்சியில் 11 வார்டுகளை தவிர்த்தால் தமிழ்நாடு முழுக்கவே பாஜக 11 மாநகராட்சி வார்டுகளை மட்டுமே வென்றுள்ளது. குமரி தவிர்த்து தமிழ்நாட்டில் பாஜக வெறும் 35 நகராட்சி வார்டுகளை மட்டுமே வென்று உள்ளது.

தனித்து போட்டி
குமரி மாவட்டத்தை தவிர்த்து விட்டு பார்த்தால் பாஜகவின் தேர்தல் நிலவரம் மிக மோசமாகவே உள்ளது. கொங்கு மாவட்டங்களிலும் சரி, வட மாவட்டங்களிலும் சரி பாஜக பெரிதாக எங்குமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கால் பாதிக்கவில்லை. சில இடங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பாஜக வார்டுகளை பிடித்துள்ளது. குமரியில் இப்படி வெல்லவும் கூட பல வார்டுகளில் காங்கிரஸ், திமுக, சிபிஎம் தொகுதி பங்கீடு பிரச்சனையால் தனித்து போட்டியிட்டது.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்
இதனால் அங்கெல்லாம் வாக்குகள் சிதறி, பாஜகவிற்கு வாக்குகள் சென்றுள்ளன. இதுவும் பாஜக குமரியில் அதிக இடம் வெல்ல காரணம் ஆகும். ஆனால் அங்கும் மொத்த மாநகராட்சி, நகராட்சியை பாஜக கைப்பற்றவில்லை. ஆனால் இதை பாஜக பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. மாறாக எங்கே சறுக்கியது என்பதை கண்டறிந்து பாஜக அதை சரி செய்ய வேண்டிய, மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Recommended Video

அதிமுக இல்லை
அதிமுக இல்லாமால் பாஜக ஓரளவிற்கு நன்றாகவே போட்டியிட்டுள்ளது. ஆனால் இது கொண்டாடும் அளவிற்கு பெரிய வெற்றியா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் இனிமேல்தான் அக்கட்சிக்கு உண்மையான சவால் உள்ளது. குமரி மாவட்டத்திற்கான கட்சி என்று சுருங்கிவிடாமல் பாஜக மற்ற மாவட்டங்களிலும் கால் பதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications