அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
சென்னை: வாக்குப்பதிவு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து நடிகர் அஜித்குமார் ஓட்டு போட்ட நிலையில், அவருக்கு முன்பாகவே நான் வந்துவிட்டேன் என்றும் ஆனால் எனக்கு முன்பு அஜித் ஓட்டுபோட்டுவிட்டார் என்றும் போலீசிடம் ஆதங்கப்பட்டு முதியவர் பேசினார்.
நாடு முழுவதும் 102 லோக்சபா தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 68, 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10. 92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

இன்று சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக, 6 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை பரிசோதிப்பதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், நடிகர் அஜித், முதல் நபராக ஜனநாயக கடமை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். தென் சென்னை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடிகர் அஜித் வாக்களித்தார். சரியாக 6.30 மணிக்கே வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித் குமார் வந்திருந்தார்.
அப்போது வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு நடந்து வந்தது. அப்போது வெளியில் காத்திருந்த நடிகர் அஜித்குமார், சரியாக 7 மணி ஆனதும் முதல் ஆளாக வாக்களித்தார். முன்னதாக நடிகர் அஜித்தை வாக்குச்சாவடி அலுவலர்கள், 6.30 மணிக்கே வந்திருந்ததால் சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினார். அதற்கு, ஒன்றும் பிரச்சனை இல்லை, நான் வெயிட் பண்றேன் எனக் கூறி வாக்குச்சாவடியில் காத்திருந்தார்.

சரியாக 7 மணிக்கு, அஜித்தை வாக்களிக்க, வாக்குச்சாவடி அலுவலர்கள் அனுமதித்தனர். தொடர்ந்து முதல் நபராக அஜித் வாக்களித்தார். தனது வாக்கை செலுத்திய பிறகு, மை வைக்கப்பட்ட விரலை காட்டினார். இதனிடையே, வாக்குச்சாவடியில் அஜித்திற்கு முன்பாகவே தான் வந்து காத்திருப்பதாக கூறி முதியவர் ஒருவர் போலீசாரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அந்த முதியவர் கூறுகையில், அஜித் வருவதற்கு முன்பே நான் இங்கு வந்துவிட்டேன். ஆனால் எனக்கு முன்னாடி அவர் சென்றுவிட்டார்.. என்று ஆதங்கத்துடன் பேசினார். தொடர்ந்து அவரை போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் ஓட்டு போட்டு விட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications