பெரியார் இல்லை எனில் ஏர் ஓட்டிக் கொண்டிருந்திருப்பேன்.. விமர்சிக்கும் இழிபிறவிகள்: துரைமுருகன்
சென்னை: தந்தை பெரியார் மட்டும் இல்லை எனில் இன்று நான் கோவணத்துடன் ஏர் ஓட்டிக் கொண்டிருப்பேன்; அந்த பெரியாரைத்தான் இன்று எதிர்த்து பேசும் அளவிற்கு இழிநிலைப் பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள் என்று திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சாடியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 3,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அனைவரும் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்றைக்குச் சில கட்சிகளைப் பார்க்கிறோம். தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லும் நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி; நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் அது யார்? எப்படிப்பட்டவர்? எந்தக் கட்சி? எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. காரணம், அவர்களையெல்லாம் நான் அடையாளம் காட்டுவதற்குத் தயாராக இல்லை. அதுதான் உண்மை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை, கவுரவத்தை நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான் உண்மை. அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நானாக இருந்தாலும் சரி; தம்பி உதயநிதியாக இருந்தாலும் சரி; அண்ணன் துரைமுருகனாக இருந்தாலும் சரி, என்ன சொன்னோம்? மாற்றுக் கட்சி என்றுதான் சொன்னோம். அந்தக் கட்சியின் பெயரைக்கூட சொல்ல எங்களுக்கு வாய் வரவில்லை. எத்தனையோ கட்சிகள் இருக்கிறது... எத்தனையோ கட்சியின் பெயரைச் சொல்கிறோம்.
ஆனால், இந்தக் கட்சியின் பெயரைச் சொல்ல நாங்கள் மறுப்பதற்கு என்ன காரணம்? உண்மையிலேயே ஒரு அரசியல் கட்சியாக இருந்து - மக்களுக்காகப் பாடுபடும் கட்சியாக இருந்து - மக்களுக்காக உழைக்கும் கட்சியாக இருந்து - உண்மையிலேயே, தமிழர்களுக்காகப் பாடுபடும் கட்சியாக இருந்தால் சொல்லலாம். வேஷமிட்டுக் கொண்டிருக்கும் - ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களை எல்லாம் நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை என்றார்.
முன்னதாக திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது: தன்மானம், தமிழ் உணர்வு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை எந்த கட்சி லட்சியமாக கொண்டு நாட்டு மக்களுக்கு விளக்கிக் கொண்டு இருக்கிறதோ அங்கு தான் நீங்கள் வந்துள்ளீர்கள். இளைய சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் தி.மு.க. நாம் இந்தியை எதிர்ப்போம். சிலர் இந்தியை ஆதரிப்பார்கள். நாம் மாநில சுயாட்சி கேட்போம். இதை எதிர்ப்பார்கள். இவற்றைக்கூட நாம் அரசியல் நோக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், நான் முதுகலை சட்டப்படிப்புப் படித்தவன், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், கழகத்தின் பொதுச் செயலாளர் என பல அந்தஸ்துகளை பெற்று இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஒரே ஒருவர்தான். அவர்தான் தந்தை பெரியார். அவர் இல்லாவிட்டால் நான் எங்கோ கோவணத்துடன் ஏர் ஓட்டிக் கொண்டுதான் இருந்திருப்பேன். நம்மைப் பற்றி நமக்கே புரியவைத்தவர் பெரியார். இதற்காக அவர் பல அவமானங்களை தாங்கியுள்ளார். தமிழ்ச் சமுதாயத்தை இந்தியாவிலேயே தலைநிமிரச் செய்தவர் தந்தை பெரியார். நாம் அறிவாளியாக இருக்கக் காரணம் பெரியார். அந்த பெரியாரைத்தான் இன்று எதிர்த்து பேசும் அளவிற்கு இழிநிலைப் பிறவிகள் உருவாகி இருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.












Click it and Unblock the Notifications