ரவுண்ட் கட்டும் அமலாக்கத்துறை..விசாரணை வளையத்தில் விசாகன்! அரசியல் உள்நோக்கம்..சொல்கிறார் முத்துசாமி
சென்னை: தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மது கடைகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அரசியல் உள்நோக்கத்தோடு அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துவதாக அமைச்சர் முத்துச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.
இந்த நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை, ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி, அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று திடீரென அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக் மேலான இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-ஐ அழைத்துச் சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில், அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை துன்புறுத்தும் அமலாக்கத் துறைக்கு கண்டனம் தெரிவிப்பதாக அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.
இந்த சோதனைகளின் போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனைகளின் போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத் துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.
பல அமலாக்கத் துறை வழக்குகளில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications