பெட்ரோல் விலை குறைப்பு.. நமக்கு நஷ்டம், ஆனால் மத்திய அரசுக்கு ரூ 1,200 கோடி வருவாய்.. அமைச்சர் பிடிஆர்
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்ட பிறகு, மாநிலத்தில் பெட்ரோல் விற்பனை 12% வரை அதிகரித்துள்ளதால் மத்திய அரசுக்குக் கூடுதலாக 1,200 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை என்பது சாமானியர்களை அச்சுறுத்தும் வகையில் உச்சத்தில் உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்துவிட்டது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயராத போதிலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

திமுக தேர்தல் வாக்குறுதி
தேர்தல் சமயத்திலேயே பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த உடனடியாக இது குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டன. குறிப்பாக ஒரு முறை அமைச்சர் பிடிஆரின் செய்தியாளர் சந்திப்பின் போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அமைச்சர் பிடிஆர், பெட்ரோல் விலையைக் குறைப்போம் என்று கூறியது உண்மை தான், ஆனால் எப்போது குறைப்போம் என்று நாங்கள் எதுவும் கூறவில்லையே" என்று பதில் கேள்வி எழுப்பினார்.

பட்ஜெட் அறிவிப்பு
அமைச்சர் பிடிஆரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மாநில நிதி நிலைமையைக் காரணமாகக் கூறி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாட்டார்கள் என்றும் விமர்சனங்கள் எழ தொடங்கின. இந்தச் சூழலில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, திமுக அரசு முதல்முறையாகக் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அதில் பெட்ரோலுக்கு தமிழக அரசு விதித்திருந்த வாட் வரி குறைக்கப்படுவதாகவும் இதன் மூலம் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கூடுதல் வரி வருவாய்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மாநில அரசின் இந்த விலை குறைப்பு பொதுமக்களுக்குச் சற்றே நிம்மதியை அளித்திருந்தது. அதேபோல விலை குறைப்பு காரணமாக மாநிலத்தில் பெட்ரோல் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல விலை குறைப்பிற்குப் பிறகு தமிழ்நாட்டில் பெட்ரோல் விற்பனை 12% வரை அதிகரித்தது. இதன் மூலம் மாநிலத்திற்கு 1,160 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசுக்குக் கூடுதலாக 1,200 கோடி ரூபாய் வரி வருவாயாகக் கிடைத்துள்ளது.

பிடிஆர் ட்வீட்
இது குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பட்ஜெட் விவாதத்தின் போது சொன்னதை போலவே, முதல்வர் ஸ்டாலின் வாட் வரியை 3 ரூபாய் குறைக்க உத்தரவிட்ட பிறகு பெட்ரோல் பயன்பாடு 12% அதிகரித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் கூடுதலாக வரி வருவாய் கிடைக்கும். இதற்கு மத்திய நிதி அமைச்சர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். பெட்ரோல் வரியில் 96% மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளாது" எனப் பதிவிட்டுள்ளார், அவரது ட்வீட் தற்போது பலராலும் ரீட்வீட் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications