ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லும் ”With-Hold” நிராகரிப்பா? பரிசீலனையா? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி with-hold என குறிப்பிடப்பட்டிருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது. "with-hold" என்பது பரிசீலனையில் இருக்கிறது என்பதாக அர்த்தம் என்கிறது அதிமுக. with-hold என்றாலே நிராகரிப்புதான் என்கிறது திமுக அரசு.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதமும் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டசபையில் with-hold என்ற ஆளுநரின் குறிப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த விரிவான விளக்கம்: with-hold என்று ஆளுநர் சொல்லியிருந்தாலோ அல்லது குடியரசுத் தலைவர் சொல்லியிருந்தாலோ அது நிலைவையில் இருப்பதாக அர்த்தம் கிடையாது. The bill is no more under consideration with-hold and returned ஆளுநர் with-hold செய்து திருப்பி அனுப்புகிறார் என்று சொன்னால், அந்த சம்பந்தப்பட்ட பில் பரிசீலனையில் ஒரு போதும் இல்லை.
With-hold and returned என்று வந்துவிட்டால், மசோதாவுக்கான ஒத்திசைவை, தன்னுடைய ஏற்பிசைவை ஆளுநர் அளிக்கவில்லை. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அந்த குறிப்பிட்ட மசோதா, அந்த சட்ட முன்வடிவை ஆளுநர் நிராகிக்கிறார் என்பதுதான் பொருளாகும்.
நீட் பிரச்சனையில், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இதேபோல ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறபோது, குடியரசுத் தலைவரும் இதேபோல with-held and returned என்று அனுப்பி வைத்தார். அன்றைக்கும் சட்டசபையில் என்ன சொன்னார்கள், இதை அவர் நிராகரிக்கவில்லை, with-held தான் செய்திருக்கிறார் என்று ஒரு சொத்தை வாதத்தை சொன்னார்கள்.
ஆனால் நீதிமன்றங்களிலும், பல இடங்களிலும் அது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. With-held என்று சொன்னாலே, ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடர்ச்சியாக நீதிமன்ற வாதங்களும், மத்திய அரசின் வழக்கறிஞர்களும் விவாதத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். எனவே, with-hold என்பதை மட்டும் சொல்லிவிட்டு, ஆளுநர் அதை நிராகரிக்கவில்லை, அவருடைய பரிசீலனையில், நிலுவையில்தான் வைத்திருக்கிறார் என்று சொல்வது முற்றிலும் தவறானது. அதைத்தான் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications