தமிழக அமைச்சரவையில் மாற்றம்! செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா.. மனோ தங்கராஜ் மீண்டும் சேர்ப்பு
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனக் கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியானது. இதற்கிடையே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல மனோ தங்கராஜ் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை காரணமாக செந்தில் பாலாஜியும், சர்ச்சைப் பேச்சு காரணமாக பொன்முடியும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டு வந்தது.

செந்தில் பாலாஜி
அதாவது பணமோசடி வழக்கு செந்தில் பாலாஜி மீது நடந்து வருகிறது. அவர் அமைச்சர் பதவியில் தொடர வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்பது குறித்து அவரே நாளை திங்கள்கிழமைக்குள் முடிவு செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் கூறியிருந்தனர். இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகலாம் எனத் தகவல் வெளியானது.
பொன்முடி
அதேபோல தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தவர் திமுக மூத்த தலைவர் பொன்முடி. கடந்த காலங்களிலும் மகளிர் விடியல் பயணம் குறித்தும் பெண்களைப் பார்த்து நீங்க எனக்கு ஓட்டுப் போட்டு கிழிச்சிங்களா என அடுத்தடுத்து பேசி சர்ச்சையில் சிக்கியவர் பொன்முடி. சமீபத்தில் இவர் பெண்கள் குறித்துப் பேசியது பெரிய சர்ச்சையானது. பல்வேறு தரப்பினரும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கட்சியின் துணை பொதுச் செயலாலளராக இருந்த பொன்முடியின் கட்சி பதவி முதலில் பறிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அவரும் ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
இப்போது தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் துறைகளில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளதாகவும் அதை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் இலாகாக்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது.
அதன்படி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்சாரத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ்
மறுபுறம் மனோ தங்கராஜ் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மனோ தங்கராஜ். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு யாரும் அமைச்சராக இல்லை. அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதை கருத்தில் கொண்டே மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு மீண்டும் பால்வளத்துறை ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

நாளை பதவியேற்பு
நாளை திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. அதில் சிவசங்கர், முத்துச்சாமி, ஆர் எஸ் ராஜகண்ணப்பன் புதிய இலாகாக்களுக்கு பொறுப்பேற்க உள்ளனர். மேலும், அப்போது தான் மனோ தங்கராஜும் மீண்டும் அமைச்சராக பதவியேற்கிறார். அப்போதே அவருக்கு என்ன துறை என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications