தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள்! பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் விவாதித்த ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் குறித்து ஸ்டாலின் முக்கிய விவாதம்.
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் ஸ்டாலின் விவாதித்தார்.
அப்போது வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு;

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவானது, அரசின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழிகாட்டுதல்களையும், சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு சமமான வாய்ப்புரிமை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பாகவும், மாநிலத்தின் மொத்த நிதி நிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும், வழங்கிடும் மையமாக இக்குழு விளங்குகிறது.
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் 9.7.2021 அன்றும், இரண்டாவது கூட்டம் 25.10.2021 அன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் அக்குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசின் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றி, ஆலோசனைகளை வழங்கி வருவதற்காக இக்குழுவிற்கு நன்றி தெரிவித்து, குழுவின் ஆலோசனைகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், நிதி மேலாண்மைக்கும் மிக முக்கியமானவை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து நிறைவேற்றிய திட்டங்களை பற்றி எடுத்துரைத்து, விரைவில் வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி, செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து குழுவின் மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், பேராசிரியர் ழான் த்ரேஸ், டாக்டர் எஸ். நாராயண், அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications