குடிகாரர்களுக்கு ஷாக் செய்தி.. டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு! இறைச்சிக் கடைகளையும் மூட அரசு உத்தரவு!
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நாளில் மதுபானங்கள் மற்றும் இறைச்சி விற்பனை நடைபெறக் கூடாது எனவும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலன்று கொண்டாடப்படுகிறது, இது கிரிகோரியன் நாட்காட்டியில் பொதுவாக ஜனவரி 15 அல்லது 16 ஆம் தேதியாக இருக்கும்.
அந்த வகையில், இந்தாண்டு திருவள்ளுவர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், இறைச்சிக் கடைகள் மூடப்படுவது வழக்கம். இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்கள் நாளை முழுவதும் மூடப்பட வேண்டும். உரிமம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து மனமகிழ் மன்றங்கள் மற்றும் மதுபானக் கூடங்களும் செயல்படக் கூடாது. இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் அல்லது பார்கள் திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2, எப்.எல்-3 உரிமதாரர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனுடன், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி ஆகியவற்றை வதை செய்வதற்கும், அவற்றின் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், இறைச்சி விற்பனை செய்யப்படும் அனைத்து கடைகளும் நாளை மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நாளில் இறைச்சி விற்பனைக்காக கடைகள் திறப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆடு, மாடு அறுவைமனைகளும் நாளை செயல்படாது. இந்த உத்தரவை மீறி அறுவைமனைகள் அல்லது இறைச்சி கடைகள் செயல்பட்டால், மாநகராட்சி சட்ட விதிகளின்படி அபராதம் விதித்தல், பொருட்களை பறிமுதல் செய்தல், கடைகளை பூட்டி சீல் வைப்பது, உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினம் ஒரு ஒழுக்கம், அறம் மற்றும் மனிதநேயத்தை நினைவுகூரும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதால், அந்த நாளில் மது மற்றும் இறைச்சி விற்பனையைத் தவிர்த்து, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications