சுள்ளுன்னு சுட்டெரிக்கும் வெயில்..வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்..வருண பகவான் மனது வைப்பாரா?
சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். பல ஊர்களில் 41 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்றும் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருவதால் வருண பகவான் கருணையால் மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த போதிலும் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று 20 இடங்களில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டி பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூரில் - 40.3 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.5 டிகிரி செல்சியஸ், கடலூரில் 39.6 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தி 39 டிகிரி செல்சியஸ், மதுரையில் 39.8 டிகிரி செல்சியஸ், தஞ்சையில் 39 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 39.3 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடியில் 39.5 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 38.8 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 41.1 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 40.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வெப்ப சலனம் காரணமாக, 13ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருண பகவான் கருணையால் மழை பெய்தால் மட்டுமே வெப்பம் தணியும் வெப்ப அலையில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும்.












Click it and Unblock the Notifications