சம்போ செந்திலுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்.. இண்டர்போல் உதவியுடன் சுத்து போடும் தமிழ்நாடு போலீஸ்!
சென்னை: சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு தமிழ்நாடு போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்பவம் செந்தில் உள்ளிட்ட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே சம்பவம் செந்திலை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் பெரம்பூர் அருகே செம்பியத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன், அவரது தந்தையான சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ஆந்திர எல்லையில் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து துப்பு துலக்கி வருகின்றனர்.
இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் என்கிற சம்பவம் செந்திலையும் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். சம்பவ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கிருஷ்ணகுமார் என்ற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர் பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அடையாறு பகுதியில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுடன் சம்பவம் செந்தில் தங்கியிருந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல் மேலாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை அடையாறு பகுதியில் விடுதி, சர்வீஸ் அபார்ட்மெண்ட் பணியாளர்களிடமும், வீடுகளிலும் சம்பவம் செந்திலின் பழைய போட்டோவை காட்டி விசாரணை நடத்தி உள்ளனர்.
அடையாறு பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கும் மொட்டை கிருஷ்ணன் சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு தமிழ்நாடு போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் செந்தில் லாட்ஜ்களில் தங்கமாட்டாராம். சர்வீஸ் அபார்ட்மெண்ட்களில் தான் தங்குவாராம். அதிலும் குறிப்பாக தனது பெயரில் எங்கும் அறை எடுத்து தங்காமல், மொட்டை கிருஷ்ணனின் பெயரில் தான் அறை எடுத்து தங்குவார் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மொட்டை கிருஷ்ணன் பிடிபட்டால், ஆம்ஸ்ட்ராங் கொலை, சம்போ செந்தில் தற்போது இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைக்கும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications