ஸ்டாலின், விஜய் தொகுதிகளை விடுங்க.. ரெக்கார்டு படைக்கும் கரூர்.. தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கரூரில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என பலரும் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாள் அன்றே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தவெக தலைவர் விஜய் கடந்த 31 ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் அவர், திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியிலும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதே போன்று திமுகவின் அமைச்சர்கள் துரைமுருகன் காட்பாடி தொகுதியிலும், ஐ.பெரியசாமி ஆத்தூர் தொகுதியிலும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் 7,600 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் ஆண்கள் 6,217, பெண்கள் 1,380, திருநங்கை 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 108 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று இறுதி நாள். இன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுள்ளது.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் சட்டசபை தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கரூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் ஆசி. எம். தியாகராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தவெக சார்பில் மதியழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிகளவிலான சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலிலும் கரூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தற்போதும் 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 83 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் 4 பேர் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில் இறுதியாக 79 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications