0 ஆன 2,500.. பொங்கல் பரிசு தொகை வருமா? வராதா? கைவிரித்த தமிழக அரசு.. மக்களுக்காக கேட்கும் தலைவர்கள்!
சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அரசு அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் பணப்பரிசு வழங்கப்படாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு. அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பணப்பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பு இல்லை. இதனால் மக்கள் கடும் ஏமாற்றமடைந்த நிலையில், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதில், நிதிச்சுமை காரணமாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார்.
2500 ரொக்கம்:
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 500 ரூபாய் முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக 2021 இல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்று வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
குடும்ப தலைவிகள் ஏமாற்றம்:
இந்த நிலையில் இந்த ஆண்டும் ரொக்க பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாமக ராமதாஸ்:
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா? மக்களை ஏமாற்றக் கூடாது! திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது." என கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்:
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்," தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதோடு, அனைத்து மக்களுக்கும் அந்த பணம் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்:
ரேஷன் அட்டைக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். காலதாமதம் இல்லாமல் மக்களுக்குப் பணம் உடனடியாக போய்ச் சேர வேண்டும். ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் போய்ச் சேராத நிலையில், பொங்கலுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
முத்தரசன்:
பொங்கல் திருநாளில் பரிசுத் தொகுப்புடன் மட்டுமே நிறுத்திக் கொள்வது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை குடும்பத்திற்கு தலா ரூ.1000 வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications