ஆதார் இல்லாததால்.. கர்நாடகாவில் இரட்டை குழந்தையோடு தமிழக கர்ப்பிணி பலி: அண்ணாமலை ஆவேசம்!
சென்னை: கர்நாடகாவில் தமிழக கர்ப்பிணி இரட்டை குழந்தையுடன் பலியான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை ட்விட் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 30). இவர் கர்நாடகா மாநிலம் துமகூருவில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு கடந்த புதன்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது.
கேரளாவில் காய்ச்சலுக்கு மருத்துவமனை வந்த சிறுமிக்கு பாத்ரூமில் பிரசவ வலி.. ஆண் குழந்தை பிறப்பு
ஆதார் கார்டு இல்லாததால்..
இதையடுத்து அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கஸ்தூரியை அக்கம் பக்கத்தினர் அழைத்துச் சென்றனர். பிரசவ வலியில் துடித்த கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்காமல் அவரிடம் ஆதார் அட்டையை பணியில் இருந்த மருத்துவர் கேட்டு இருக்கிறார். ஆதார் கார்டு தன்னுடன் எடுத்து வராததால் மருத்துவமனையில் கஸ்தூரியை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதிக ரத்தப்போக்கு
இதனால், பிரசவ வலியுடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் கஸ்தூரிக்கு பிறந்தன. ஆனால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தைகள் இரண்டும் அடுத்தடுத்து உயிரிழந்தன. சிறிது நேரம் கழித்து கஸ்தூரியும் உயிரிழந்தார். ஆதார் கார்டு இல்லாத காரணத்தால் சிகிச்சை அளிக்க மறுத்ததில் இரட்டை குழந்தைகளோடு தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் இடைநீக்கம்
இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை டாக்டர் தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த துயர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் ஆதார் கார்டு வழங்காததால் சிகிச்சை அளிக்க மறுத்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி அளிக்கிறது
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்புடைய மருத்துவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது.
கைது செய்து, தண்டனை வழங்கனும்
இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.