TNPSC: தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்!
சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. 828 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை 2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்ளிட்ட குரூப் 2 பதவிகளுக்கும் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை 3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை 3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப் 2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி வெளியானது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சம் பேர் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப் 2 பதவிகளில் 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளில் 9457 பேரும் தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இதைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு கடந்த மாதம் 8ஆம் தேதி நடைபெற இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 மையங்களில் நடைபெற ணஇருந்தது. இந்த நிலையில் அரும்பாக்கம், நந்தனம் தேர்வு மையத்தில் குளறுபடி ஏற்பட்டது.
இதையடுத்து தேர்வர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். தேர்வர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைக் கருத்தில் கொண்டு, தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே மாநிலம் முழுவதும் தேர்வை ரத்து செய்வதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்த விவகாரத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அதிரடியாக மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அன்று ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன. காலையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, பிற்பகலில் பொது அறிவு, பொது நுண்ணறிவு, பகுத்தறிவு தொடர்பான தேர்வுகள் நடைபெறும்.
கடுமையான கட்டுப்பாடுகள்:
தேர்வு மையங்களுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காலை 9:30 மணிக்குத் தேர்வு தொடங்குவதால், 8:30 மணிக்கே தேர்வர்கள் மையத்திற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தவிர்க்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்வர்கள் மையங்களுக்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களில் கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தேர்வின் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நேர்முகத் தேர்வு குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசுப் பணியில் சேரும் கனவுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்தத் தேர்வை எதிர்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications