புது உச்சம்: தமிழகத்தில் ஒரே நாளில் 5849 பேருக்கு கொரோனா.. சென்னையைவிட பிற பகுதியில் 6 மடங்கு அதிகம்
சென்னை: தமிழகத்தில் மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. எனவே, முதல்முறையாக 5,000 என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட புள்ளி விவரம் பல்வேறு விவகாரங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் 100ல் ஒரு மடங்கு கூட சுகாதார வசதி இல்லாத மாவட்டங்களில் இப்படி கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலையளிப்பதாக உள்ளது.

மருத்துவ கட்டமைப்பு தேவை
அரசு உடனடியாக பிற மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பை அதிகரிப்பது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது போன்றவைதான், இந்த பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதோ அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தை பார்த்தாலே, அது புரிந்து விடும்.

தமிழகத்தில் அதிகம்
தமிழகத்தில் இன்று மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவாகும். இன்று 74 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 50 பேர் அரசு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். பிற 24 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு குறைவுதான். சென்னையில், 1171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், கொரோனாவுக்கு இன்று, 21 பேர் பலியாகியுள்ளனர்.

குணமடைவோர் விகிதம்
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை 1,31,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடையும் விகிதம் அதிகமாக இருப்பது ஒரு நல்ல விஷயம்தான்.

மாவட்டங்கள் நிலவரம்
சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக பாதிப்பு என்றால், அது திருவள்ளூர் மாவட்டத்தில்தான். அங்கு 430 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவாக, 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 223 பேர், கோவை 178, திண்டுக்கல் 99, கள்ளக்குறிச்சி 86, காஞ்சிபுரம் 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி 152, மதுரை 197, புதுக்கோட்டை 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications