தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் - ஒரே நாளில் 3,986 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரம் பேரை நெருங்கியது. 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 1824 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாநிலம் முழுவதும் இன்று கொரோனாவிற்கு 3986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,11,110 பேராக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1,824 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் இதன் மூலம் 8,70,546 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 27,743 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video
கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் தனியார் மருத்துவமனையிலும் 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,821 பேராக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 260 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 79,927 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,98,45,778 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் 332 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. திருவள்ளூரில் 208 பேருக்கும், திருப்பூரில் 141 பேருக்கும் தஞ்சாவூரில் 108 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.