வரிசையாக வருது முகூர்த்தம்..தென்னகத்துக்கு படையெடுக்கும் சென்னையன்ஸ்! சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தொடர் விடுமுறை, முகூர்த்தம், மீலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," 03/09/2025 (புதன்கிழமை) 04/09/2025 (வியாழக்கிழமை முகூர்த்தம்), 05/09/2025 (வெள்ளிக்கிழமை மிலாடி நபி) மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 06/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 360 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) அன்று 710 பேருந்துகளும், 05/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, லை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 80 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) மற்றும் 05/09/2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 105 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னை மாதவரம்
சென்னை மாதாவரத்திலிருந்து 03/09/2025 மற்றும் 04/09/2025 ஆகிய நாட்களில் 25 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 03/09/2025 அன்று 17,632 பயணிகளும், 04/09/2025 அன்று 23,032 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,271 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,317 பயணிகளும் ஞாயிறு அன்று 20,740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழகம்
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications