உசுரே போகுது..உசுரே போகுது! ஊருக்கு ரயில்ல போகையில! ரயில் பயணிகள் கண்ணில் ரத்தக் கண்ணீர்! தீர்வென்ன?
சென்னை: நாளுக்கு நாள், ரயில் பயணம் என்பது மிகுந்த சிரமமாகி வருகிறது. முன்பதிவு செய்தாலும் சரி, முன்பதிவு செய்யாவிட்டாலும் சரி சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் ரயில் பயணிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அவை பெயரளவுக்கு மட்டுமே இயக்கப்படுவதாகவும் அவற்றால் எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர் ரயில் பயணிகள்.
தமிழகத்தை பொறுத்தவரை தென் மாவட்டங்கள் அவ்வளவாக தொழில் வளர்ச்சி பெறாத நிலையில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்னகத்தைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பணியாற்றி வசித்து வருகின்றனர்.
பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளில் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி பொதுமக்கள் லட்சக்கணக்கில் பயணம் செய்வது வழக்கம். இதனை பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகளில் கட்டண கொள்ளை நடப்பதால் பெரும்பாலான பயணிகளின் முக்கிய தேர்வாக ரயில் பயணமே இருக்கிறது.

ரயில் நெரிசல்
சொல்லப்போனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி. பொங்கல் பண்டிகைக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணம் என்பதால் ரயில் பயணமே பெரும்பாலான மக்களின் தேர்வாக இருக்கிறது. சென்னையில் இருந்து தென்னகம் நோக்கி அதாவது திருச்சி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள்.
தென் மாவட்ட ரயில்
முன்பதிவு செய்தாலும் பலருக்கு இடம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தான் எழுகிறது. காரணம், தற்போது தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கான வட மாநில மக்கள் வேலை செய்து வரும் நிலையில் முன்பதிவு செய்த பெட்டிகளை கூட ஆக்கிரமித்துக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கால் வைக்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு நெரிசல் உள்ளது. ரயில் முழுவதும், ஏன் கழிப்பறையில் கூட இடமில்லாத அளவுக்கு மக்கள் பயணிப்பதை பார்க்க முடிகிறது.
பொதுமக்கள் வேதனை
ஊருக்குச் செல்லும்போது மட்டுமல்ல திரும்ப வரும் போதும் அதே நிலை தான் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் பண்டிகை நாட்களில் தான் கூட்டம் என்ற நிலை மாறி தற்போது சாதாரண நாட்களில் கூட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாதாரணமாக ஏதாவது ஒரு வேலைக்கு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல வேண்டுமென்றால் பல ஊர்கள் மாறி செல்ல வேண்டிய நிலை தான் இருக்கிறது.
சிறப்பு ரயில்
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டாலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கிறது. அந்தியோதயா ரயில் மட்டுமே முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த ரயிலிலும் அனைத்து நாட்களிலும் கூட்டம் அலைமோதி காணப்படும். தற்போது சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு நெல்லை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, பொதிகை, முத்துநகர், கொல்லம் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களும், பகல்களில் வந்தே பாரத், குருவாயூர், வைகை எக்ஸ்பிரஸ் ஆகியவையும் இயக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் வாராந்திர ரயில்களும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டாலும் சாதாரண மக்கள் அதில் செல்ல முடியாத நிலையே இருக்கிறது.
ரயில் சேவை
மேலும் வந்தே பாரத், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களின் விலையும் அதிகம். இதனால் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் சாதாரண ஏழை குடும்பங்கள் பயணிப்பது எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. இந்த நிலையை போக்க பண்டிகை நாட்கள் மட்டுமல்லாது சாதாரண நாட்களிலும் சிறப்பு ரயில்கள், கூடுதல் முன்பதிவு இல்லா பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் ரயில் பயணிகள்.












Click it and Unblock the Notifications