ஆம்னி அதிரடி.. ராத்திரி மட்டுமல்ல.. பகலிலும் ரெடி.. கோட்டைக்கு கோரிக்கை.. தமிழக அரசு என்ன சொல்லுமோ
சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் முடிவுபெறாத நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்த வாரம் சனிக்கிழமையன்றே பண்டிகை விடுமுறை ஆரம்பமாகிவிடுவதால், 13 முதல் 17ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால், ஜனவரி 12ம்தேதியே வெளியூருக்கு பயணமாக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்துவிட்டது..

அதேபோல, வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன.. அதனால்தான், பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவாகியிருக்கிறது.
சிறப்பு பஸ்கள்: அப்போது, பொங்கலுக்கான சிறப்பு பஸ்கள், வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை, சென்னையில் இருந்து இயக்கப்படும்.. 3 நாட்கள் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 4,706 சிறப்பு பஸ்கள் சேர்த்து இயக்கப்படும். 3 நாட்களுக்கு, 11,006 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மற்ற ஊர்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்கள் என ஒட்டுமொத்தமாக, 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.. எனினும், பஸ் தொழிலாளர்கள் திடீரென ஸ்டிரைக் அறிவித்துள்ளது, மிகப்பெரிய கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கின்றன.
பேச்சுவார்த்தை: தொழிற்சங்கத்தினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை.. எனினும், அனைத்து இடங்களிலும் பேருந்துகள் சேவை வழக்கமாகவே இருப்பதாகவும், எங்கேயும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மற்றொருபக்கம், இந்த ஸ்டிரைக்கை முன்னிறுத்தி ஆம்னி பஸ்களிலும் கட்டணம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், பகல் நேரங்களில் ஆம்னி பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் இது சம்பந்தமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
பஸ்கள் இயக்கம்: அதில், "தமிழகத்துக்குள் தினமும் 2800 ஆம்னி பேருந்துகள், 3600 சர்வீசஸ் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதில் பெரும்பாலும் 80 சதவீத ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழா காலங்களில் தேவைக்கு ஏற்றார்போல அதிகமான சர்வீஸ் இயக்கப்படும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு கோரிக்கை வைத்தால் பயணிகளின் நலன் கருதி இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் எங்களது ஆம்னி பேருந்துகளை பகல் நேரங்களில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல தயாராக உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு: ஆனால், இந்த கோரிக்கைக்கு தமிழக அரசின் பதில் என்ன என்று தெரியவில்லை. ஒருவேளை ஊழியர்களின் ஸ்டிரைக் தொடரும்பட்சத்தில், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, பொதுமக்கள் புலம்பு வருகிறார்கள். அதேபோல, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 1800 4256151 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று நேற்றைய தினம் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications