டெல்லியில் மத்திய ஜல் சக்தி அமைச்சரை சந்தித்தார் துரைமுருகன்.. காவிரி விவகாரம் தொடர்பாக கோரிக்கை!
சென்னை: டெல்லிக்கு சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்துப் பேசி உள்ளார். காவிரி நீர் விவகாரம், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கர்நாடகா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட நிலையில் கர்நாடக அரசு உரிய அளவில் தண்ணீர் திறக்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தினால் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு நியமிக்கப்பட்டது, ஆனால் அந்த ஆணையம் சொல்லியும் கர்நாடக அரசு கேட்கவில்லை.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் வலியுறுத்தினார். இந்நிலையில், இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக டெல்லி சென்றுள்ளார் அமைச்சர் துரைமுருகன். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று காலை புறப்பட்டு டெல்லி சென்றார்.
அங்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்துப் பேசி உள்ளார் அமைச்சர் துரைமுருகன். அப்போது, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் உரிய நீரை திறந்து விட, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பாகவும் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு தொடர்ந்து அதனை எதிர்த்து வருகிறது. அது தொடர்பாகவும் அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கர்நாடகாவில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், தண்ணீர் வரத்து உள்ளது. இந்த மாதம் தண்ணீர் பிரச்சனை இல்லை. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து, 30,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினியில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
வருங்காலங்களில் தமிழகத்துக்கு உண்டான பங்கீட்டு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டின் கோரிக்கை. வரும் ஆகஸ்டில் 45 டி.எம்.சி தண்ணீரை எக்காரணம் கொண்டும் குறைவில்லாமல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோருகிறது.












Click it and Unblock the Notifications