தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
சென்னை: தமிழ்நாட்டில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் வங்கக் கடலில் வடக்கு இலங்கை பகுதிக்கு அருகே நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வலுவிழந்து உள்ளது. இதன் காரணமாக பெய்து வந்த மழை தென் மாவட்டங்களை நோக்கி நகர்ந்து உள்ளது.

மழை
தற்போது வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த மாற்றமும் சேர்ந்து கொண்டு, தாழ்வு நிலையாக மாறி கனமழையை கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இன்றில் இருந்து அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. நேற்று தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவு முழுக்க பரவலாக மழை பெய்தது.

விளாசிய கனமழை
அதேபோல் டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து மழை வெளுத்து வாங்கியது.

விடுமுறை
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இரவில் லேசான மழை பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை,, புதுக்கோட்டை மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

பள்ளி கல்லூரிகள்
இந்த மழை காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. கடலூர், அரியலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் சேர்த்து மொத்தம் இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications