அக்னிக்கு நடுவே ஜில் ஜில் அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்.. உள் மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமாக இருக்கும் நிலையில் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அதே நேரம் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்றும், நாளை முதல் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்
தமிழகத்தில் மே 1 அல்லது 2 முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏப்ரல் 28 - 30க்குள் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் 38.6°C பதிவாகியுள்ளது. இது மே 1,2 ஆம் தேதிக்குள் 40°C-ஐ கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூரில் 40.5°C பதிவாகியுள்ளது. மே 2 ஆம் தேதிக்குள் இது 42°C-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகருக்குள் ஞாயிற்றுக்கிழமை 35°C இருந்தது. மே 2 ஆம் தேதிக்குள் மேலும் 3-4°C அதிகரிக்கலாம். திடீரென மழை பெய்தால், அடுத்த நாள் மட்டும் வெப்பத்திலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும். அதன் பிறகு மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
வாட்டி வதைக்கும் வெயில்
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பம் அதிகளவில் இருப்பதை உணர முடிகிறது. வெப்பத்தை அதிகளவில் உணரச் செய்யக் கூடிய சூப்பர் எல்நினோ அக்டோபர் மாதத்தில் உருவாக இருப்பதால், நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் வெப்பத்தின் கொடுமை சற்று அதிகமாகவே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இதனை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவுகிறது. கோடை மழைக்கு சாதகமான சூழல் எதுவும் இல்லாத காரணத்தினாலும் வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. எனினும், தென்மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் திடீர் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
வெயிலும் இருக்கு, மழையும் இருக்கு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் எனவும், அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் கடுமையாக இருக்கும் என்றும், சில இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, ஏப்ரல் 30 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. நேற்று மாலையிலும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications