சிங்கப்பெண்கள்..பொன்விழா காணும் தமிழக பெண் காவலர்கள் ..முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
முதல் அமைச்சராக தந்தை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட பெண் காவல்துறையின் பொன் விழாவினை அவரது மகன் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று தலைமை ஏற்று சிறப்பித்தார்.
தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன் விழா கொண்டாடப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது. முதல் அமைச்சராக தந்தை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட பெண் காவல்துறையின் பொன் விழாவினை அவரது மகன் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று தலைமை ஏற்று சிறப்பித்தார். முதல்வர் முன்னிலையில் பல்வேறு சாகசங்களை மகளிர் காவலர்கள் செய்து காண்பித்து பாராட்டுக்களை பெற்றனர்.
1973ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் தமிழக காவல் துறையில் பெண் காவலர்களின் முதல் காலடித்தடம் பதிந்தது. அவர் தொடங்கி வைத்த பெண் காவலர்கள் 50 ஆண்டுகளை தொட்டு இன்று ஆண் காவலர்களுக்கு இணையாக வளர்ந்து சிங்கப்பெண்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார்கள்.
1973ஆம் ஆண்டு முதன் முதலாக காவல்துறையில் பெண் காவலர்களை சேர்ந்த போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக்காவலர், 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார்.

முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி
1976ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக திலகவதி தேர்வு பெற்று சாதனை படைத்தார். தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமை பெற்றவர் லத்திகாசரண். சென்னையின் முதல் பெண் காவல்துறை ஆணையரும் இவர்தான். இந்த பெருமையை லத்திகாசரணுக்கு வழங்கியவரும் முதல்வர் கருணாநிதிதான். தமிழக போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் டெல்லியில் சி.பி.ஐ. போலீசில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி பெருமை சேர்த்தார்.

அனைத்து மகளிர் காவல்நிலையம்
1992ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அந்த காவல் நிலையத்தில் முதல் இன்ஸ்பெக்டராக சிசிலி பதவி ஏற்றார். 2004ஆம் ஆண்டு ஜெயலலிதாவாலேயே, பெண் போலீஸ் பட்டாலியனும் தொடங்கப்பட்டது. இந்த பெண் போலீஸ் பட்டாலியனில் பெண் போலீஸ் கமாண்டோ படை, அதிவிரைவு படை போன்றவையும் அடங்கும்.

சிங்கப்பெண்கள் படை
சிறிது சிறிதாக உயர்ந்த பெண் போலீஸ் தமிழகத்தின் அனைத்து போலீஸ் பிரிவுகளிலும் வியாபித்து நிற்கிறார்கள்.
சென்னை போலீஸ் காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் காவல் பணியை பெண் போலீசார்தான் சிறப்பாக முன் நின்று செய்கிறார்கள். 1973ஆம் ஆண்டு 22 பேருடன் தொடங்கப்பட்ட பெண் காவலர்கள் படை தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. 1 டி.ஜி.பி., 2 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 14 ஐ.ஜி.க்கள் இந்த பெண் காவலர் படையில் அணிவகுத்து நிற்கிறார்கள்.

சிறப்பு சேர்க்கும் பெண் காவலர்கள்
தற்போது அனைத்து பிரிவுகளிலும் பெண் காவலர்களின் பணி முக்கியமானதாக உள்ளது. அவர்கள் தமிழக காவல்துறைக்கு தூண் போன்று உள்ளார்கள் என்று பெருமை பொங்க கூறியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. தமிழகத்தில் உள்ள 1,498 காவல் நிலையங்களில் 503 போலீஸ் நிலையங்களுக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பெண் இன்ஸ்பெக்டர்கள் தான் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் அவர்களது பணி சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் 228 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. அந்த காவல் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 600 பெண்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனை பெண் காவல்துறையினர் சிறப்பாக கையாண்டு உள்ளனர். கம்ப்யூட்டர் பிரிவில் பெரும்பாலும் பெண் காவலர்கள்தான் பணியாற்றி வருகிறார்கள். எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய பணிகளை கம்ப்யூட்டரில் அவர்கள்தான் பதிவு செய்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு பிரிவில் இருந்து முக்கியமான நிர்வாக பணிகளிலும் பெண் போலீசாரின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது என்றும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

பொன்விழா காணும் மகளிர் காவலர்கள்
தமிழக காவல்துறையின் திரும்பிய திசை எல்லாம் பெண் காவலர்கள் சிறப்பாக பணியாற்றி சிங்கப்பபெண்களாக தலை நிமிர்ந்து நிற்கின்றனர். பொன்விழா காணும் பெண் காவலர்களை பெருமைப்படுத்தும் வகையில் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. மகளிர் காவல்துறையின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் காவலர்களால்தான் நடத்தப்படுகிறது.

அதிரடி அறிவிப்புகள்
குதிரைப்படை வீராங்கனைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை விழா நடக்கும் அரங்கத்துக்கு வரவேற்று அழைத்து வந்தனர். மோட்டார் சைக்கிள் வீராங்கனைகளும் அணிவகுத்து வருவார்கள். அணிவகுப்பு மரியாதையும் பெண் போலீசாரால்தான் நடத்தப்படுகிறது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் காவல்துறையினரின் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி அவள் திட்டத்தின் லட்சிணையையும் சிறப்பு தபால் தலையையும் முதல்வர் வெளிட்டார்.












Click it and Unblock the Notifications