தமிழகத்தில் இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதற்கு இது தான் காரணம்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு
சென்னை: தமிழக மக்களுக்கு இந்தி தெரியாது என்பதால் தான் பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றும், தமிழகத்தில் இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து மாநில கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவணர் அரங்கத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக இந்தக் கருத்தரங்கில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி., மத்திய அரசு கல்வி மூலம் தாங்கள் விரும்பும் இந்தியாவை கட்டமைக்கப் பார்ப்பதாகவும் அ என்றால் அம்மா என்பதை விடுத்து அ என்றால் அனுமான் என பேசப் பழக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழக மக்களுக்கு ஹிந்தி தெரியாது என்பதால் தான் பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியவில்லை என்றும் அதனால் தான் தமிழகத்தில் இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
முன்னதாக இந்த கல்வி கருத்தரங்கில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், புதிய வரைவு கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தி.மு.க. குழுவின் அறிக்கை நாளை மறுநாள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வராமல் இருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications