11-வது உலகத் தமிழ் மாநாடு ஆர்வம் காட்டவில்லையா முதல்வர் மு.க.ஸ்டாலின்?தமிழார்வலர்கள் தனியே ஏற்பாடு!
சென்னை: 11-வது உலகத் தமிழ்நாட்டை திமுக அரசு நடத்த வேண்டும் என்ற தமிழறிஞர்களின் விருப்பம் நிறைவேறவில்லை. இதனால் தமிழார்வலர்கள் 11-வது உலகத் தமிழ் மாநாட்டை தனியே நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அனைவரது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் நோக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் முடிவு செய்தது.
மகாகவி பாரதி பெயரில்.. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை.. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு
2-வது உலகத் தமிழ்நாடு
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1964-ம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களால் மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள்தான் நடைபெற்றுள்ளன. முதலாவது உலகத் தமிழ் மாநாடு 1966-ல் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. 2-வது மாநாடு நடத்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த பக்தவச்சலம் ஒப்புதல் பெற்றார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் தோற்று திமுக ஆட்சிக்கு வந்தது. முதல்வராக பேரறிஞர் அண்ணா பதவி வகித்த போது தமிழக அரசின் நிதி உதவியுடன் 1968-ல் சென்னையில் பிரமாண்டமாக 2வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.
கோவை செம்மொழி மாநாடு
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் உலகத் தமிழ் மாநாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது நிறைவேறவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது 1981-ம் ஆண்டு மதுரையில் 5-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. 1995-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தஞ்சாவூரில் 8-வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் ஈழத் தமிழறிஞர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது சர்ச்சையானது. சென்னை விமான நிலையத்தில் இருந்தே தமிழறிஞர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது. இதையடுத்து கருணாநிதி முதல்வராக இருந்த போது மீண்டும் உலகத் தமிழ் மாநாடு நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது நிறைவேறாமல் போனதால் செம்மொழி மாநாடு என நடத்தப்பட்டது.
எப்போது 11-வது உலகத் தமிழ் மாநாடு?
கடைசியாக 10-வது உலகத் தமிழ் மாநாடு 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடத்தப்பட்டது. முதல்வராக கருணாநிதி பதவி வகித்த காலங்களில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படவில்லை. இது தொடர்பாக கருணாநிதிக்கு பெரும் வருத்தம் அவரது காலம் முடியும்வரை இருந்தது என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். கருணாநிதியின் இந்த கவலையை அவரது மகன் மு.க.ஸ்டாலின் போக்குவார் என்ற நம்பிக்கையில் 11-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு திமுக அரசு முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு சென்றனராம் சில தமிழார்வலர்கள்.
தமிழறிஞர்கள் ஏற்பாடு
ஆனால் என்ன காரணத்தாலோ முதல்வர் தரப்பில் இது தொடர்பாக பெரிய கவனம் எடுத்துக் கொள்ளப்படவில்லையாம். இது தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னையில் வரும் 22-ந் தேதி 11-வது உலகத் தமிழ் மாநாடு குறித்த கலந்துரையாடல் கூட்டத்துக்கு உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.