பனையூரில் 4 நாட்கள் தொடர் ஆலோசனை.. தவெக நிர்வாகிகள் நியமனத்தில் ஆர்வம் காட்டும் விஜய்.. முழு விவரம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அக்கட்சியின் நிர்வாகிகளுடன் அடுத்த 4 நாட்களும் தொடர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனையின் போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தனது கடைசி படத்தை முடித்த பின் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். அதற்கேற்ப கடந்த அக்டோபர் மாதத்தில் விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாட்டையும் நடத்தி கவனத்தை ஈர்த்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தொடர்ந்து அறிக்கை மற்றும் எக்ஸ் தளத்தில் பதிவுகள் மூலமாகவே அரசியலில் ஈடுபட்டு வந்தார். இதனால் விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் ஜனவரி 20ஆம் தேதியன்று பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை நேரில் சென்று சந்தித்து, எப்போது உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சி தரப்பில் இந்தியா கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் மூலமாக தமிழ்நாடு அரசியல் தமிழக வெற்றிக் கழகம் முன்னேற்றப் பாதையில் இருப்பதாக விமர்சகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதில் நிர்வாக வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாவட்டச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வெள்ளி நாணயத்தை அளித்து விஜய் வாழ்த்தினார்.

இந்த நிலையில் அடுத்த 4 நாட்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் பனையூரில் நடக்கவுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் பங்கேற்க உள்ளார்.
இதனால் அடுத்த 4 நாட்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் இருக்கும். கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், முதல் ஆண்டு நிறைவு கூட்டத்தில் நிர்வாகிகளை அறிமுகம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் மே மாதத்தில் இருந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications