நான் ரெடி நீங்க ரெடியா? 30 டீம், 2 லட்சம் போஸ்டிங்! தளபதி விஜய் போடும் பக்கா ப்ளான்..யாருக்கு எதிர்?
சென்னை: 'தி கோட்' படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்காக ஏற்பாடுகளை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் வழக்கறிஞர் அணி, ஐடி பிரிவு, மகளிரணி உள்ளிட்ட 30 அணிகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும், 2 லட்சம் பேரை நிர்வாகிகளாக நியமனம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைக்கு நம்பர்-1 நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் விஜய் அரசியல் வருகைக்கு முன்னதாக தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சி தொடங்கப் போவதை சூசகமாக அறிவித்தார்.

அரசியலுக்கு ஏனோதானோ என்று வரக்கூடாது என தீர்க்கமாக இருந்த விஜய் தான் நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வந்தார்.
மாநில நிர்வாகிகள் நியமனம் மாவட்ட தலைவர்கள் நியமனம் என மெதுவாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் அவரது செயல்பாடுகள் இருந்தது. பனையூரில் அடிக்கடி ஆலோசனை மாணவர்களுக்கு திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து திட்டமிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் ஒரு வழியாக கட்சி பெயரையும் அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். இப்போது கோட் படத்தின் போஸ்ட் ப்ரெட்க்சன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் முடிவடைந்த பின்னர் தான் அவரது முழு அரசியல் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளின் படி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியது, நீட் தேர்வு தொடர்பான பேச்சும் தான் அன்றைய ஹாட் டாபிக்காக இருந்தது. அதே நேரத்தில் நடிகர் விஜய் ட்விட்டர் அரசியல் மட்டுமே செய்து வருகிறார் என விமர்சனமும் உருவானது. தொடர்ந்து வாழ்த்துக்களை மட்டுமே விஜய் தெரிவித்து வருவதாகவும், ட்விட்டர் அரசியல்வாதி எனவும் அவரை கிண்டல் செய்தனர்.
ஆனால் விஜய் விமர்சனங்களை தவிர்த்து விட்டு ஆக்கபூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்தவும், நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில், சுமார் 2 லட்சம் பேருக்கு பதவி வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விஜயின் கட்சியில் மெயின் கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணி, வர்த்தக அணி மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கிறது.
ஆனால் அதன் மூலம், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பதவி வழங்க முடியும் என்பதால் ரசிகர் மன்றத்தில் இருந்தே தீவிரமாக செயல்பட்டு வந்த நிர்வாகிகள் பல அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் பிரிவு, தொழிலாளர்கள் அணி, ஓட்டுனர் பிரிவு, மீனவர் அணி, மாணவரணி, மகளிர் அணி உள்ளிட்ட 30 அணிகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் அந்த அணிகளில் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் நிர்வாக குழு உறுப்பினர் என சுமார் 2 லட்சம் பேருக்கு பதவி வழங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் அக்டோபர் மாதத்தில் விஜயின் அரசியல் முதல் மாநாடு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மாநாட்டில் நடிகர் விஜயின் கட்சிக் கொடி, கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என்றும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக 5 மண்டல மாநாடுகள், பல மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள், சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை உள்ளிட்ட நிகழ்வுகள் இருக்கும் என்றும், 2025 முதல் 2026 வரை விஜயின் அரசியல் பயணம் பெரிய அளவில் நிச்சயம் பேசப்படும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications