அமித் ஷா சொன்ன ஒரு வார்த்தை.. அப்படியே சைலண்ட் ஆன விஜய்.. தூண்டிலில் மீன்.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பேரணியில் 41 பேர் இறந்த பெரும் சோகமான சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. இந்த விவகாரத்தில் மையமாக இருந்த விஜய், தமிழ்நாடு அரசியலின் பேசுபொருளாக இருந்தாலும், மௌனம் காத்து வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான ஒருநபர் விசாரணையை நிராகரித்து, கரூர் வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றம் விஜய்க்கு சட்ட ரீதியாக ஒரு வகையில் வெற்றியை வழங்கியது. ஆனாலும் இதற்கு பின் விஜய் எந்த முடிவும் எடுக்காமல், பெரிதாகி எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார்.

முடிவு எடுக்க திணறும் விஜய்
வரவிருக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தில் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளார். அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவாரா அல்லது தனித்துச் செயல்படுவாரா என்பதே அந்தக் கேள்வி. தமிழக வெற்றிக் கழகம் (TVK), தமிழ்நாட்டில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவரை மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கின்றனர்.
தேசிய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிகள் மிக முக்கியமானதாக மாறியுள்ளன. விஜய்யின் அடுத்த நகர்வு அவரது கட்சிக்கும் தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் அவர் தொடர்ந்து அமைதி காப்பது பெரிய அளவில் கேள்விகளை, விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அமித் ஷா
பாஜக, விஜய்யை தங்கள் கூட்டணியில் சேர்க்க தீவிரமாக முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மூத்த பாஜக தலைவர்கள், விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டில் NDA-வின் அடித்தளம் வலுப்பெறும் என்று நம்புவதாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக இதுவரை பெரிய அளவில் வளர்ச்சி அடையாத நிலையில், இந்த கூட்டணி முக்கியத்துவம் வாய்ந்தது. விஜயுடன் கூட்டணியை உடனே இறுதி செய்யுங்கள் என்று அமித் ஷா ஏற்கனவே உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அதிமுக-வின் நிலைப்பாடு இந்த முடிவை சிக்கலாக்குகிறது. எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தலைமையிலான அதிமுக, முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் விஜய் துணை முதல்வர் போஸ்டிற்கு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அது அரசியல் ரீதியாக தனக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறாராம்.
NDA-வில் இணைவது அவருக்கு தேசிய அளவில் அங்கீகாரத்தையும் மத்திய அரசின் ஆதரவையும் பெற்றுத்தரலாம். ஆனால், பழைய அரசியல் கட்சிகளுக்கு, வழக்கமான அரசியல் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் அவரது நம்பகத்தன்மைக்கு இது ஆபத்தை விளைவிக்கலாம். நான் மாற்று என்று விஜய் கூறுவதற்கு எதிராக இந்த கூட்டணி அமையலாம்.
விஜய்க்கு பெரிய சவால்
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்க்கு பெரிய சவால் ஏற்பட்டு உள்ளது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் அதே கூட்டணியில் பாஜக உள்ளது விஜய்க்கு சிக்கலாக மாறி உள்ளது. பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறி வருகிறார். அவர்களுடன் முதல் தேர்தலே கூட்டணி வைத்தால் விஜய் அரசியல் முடிவிற்கு வரும்.
பாஜகவின் மத ரீதியிலான அரசியல் விஜய் முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலுக்கு பெரிய சிக்கலாகும். விஜய் தலித், கிறிஸ்துவர்கள் வாக்குகள் குறி வைக்கிறார். ஆனால் அவர் பாஜக உள்ள கூட்டணிக்கு சென்றால் அது விஜய்க்கு சிக்கலாகும். விஜய் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால்.. பாஜக கூட்டணியை முறித்துவிட்டு வாருங்கள் என்று எடப்பாடியிடம் கூற வேண்டும்.
இதை எடப்பாடி ஏற்பாரா.. டெல்லி பாஜக அனுமதிக்குமா? என்ற கேள்வி உள்ளது. விஜய்க்கு இருக்கும் பெரிய சவாலே இதுதான். விஜய் இதை எப்படி சமாளிப்பார்.. என்ன மாதிரியான முடிவுகளை இதில் எடுப்பார் என்ற பெரிய கேள்வி நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications