"கவனமாக இருங்க.. அலட்சியம் வேண்டாம்! BA4, BA5 வகை கொரோனா தமிழகத்தில் பரவுது!" எச்சரிக்கும் மா.சு
சென்னை: தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கும் நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
இதனால் தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. அதேபோல வேக்சின் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் படுகொலைகள்- அமித்ஷா ராஜினாமா செய்ய கோருவது பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி!
தலைநகர் சென்னை
சென்னை அடையாறு பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் நகர் 3ஆவது பிரதான சாலையில் ஒரே பகுதியில் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறை சார்பில் அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். மேலும், அங்கு வசிக்கும் மக்களின் உடல்நிலை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அதைத் தொடர்ந்து அங்குச் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உலகின் பல நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி வைரஸ் பாதிப்பு 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டில் எட்டு மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பு 13 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
தமிழகம்
தமிழ்நாட்டிலும் அதே நிலை தான். வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் மெல்ல உயர்ந்துள்ளது. இதையடுத்து சென்னை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளோம். தமிழகத்தில் சரிபாதி பாதிப்பு, அதாவது 50% பாதிப்பு சென்னையில் தான் ஏற்படுகிறது. சென்னையில் 112 தெருக்களில் 3 பேருக்கு அதிகமாகவும், 25 தெருக்களில் 5 பேருக்கு அதிகமாகவும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை
அப்படி சென்னையில் மட்டும் 2,225 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களைச் சென்னை மாநகராட்சி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்த இடவசதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் ஐவர் சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீத பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களுக்கும் கூட பெரிய பாதிப்பு இல்லை.
பெற்றோர்
இப்போது மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பார்க்க வேண்டும். பெற்றோர்கள் யாரும் அலட்சியமாக இருக்கக் கூடாது.
கொரோனா வகைகள்
தமிழகத்தில் இப்போது அதிகம் பிஏ4, பிஏ5 என்ற வகை கொரோனா வகைகளே பரவி வருகிறது. இவை மற்ற கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். மேலும், வரும் ஜூலை 10 தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் 31ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்" என்றார்.