போதும் சாமி! ஆளை விடுங்க! பகையை மட்டுமே சம்பாதித்துள்ளேன்! தமிழருவி மணியன் விரக்தி!
சென்னை: ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக பேசி பேசி பகையை மட்டுமே தாம் சம்பாதித்துள்ளதாகவும் இனி அரசியல் பேச விரும்பவில்லை என்றும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் ஓராண்டு கால செயல்பாடுகள் பற்றி அறிவதற்காக நாம் அவரை தொடர்பு கொண்டு கருத்தை அறிய முற்பட்ட போது அவர் இவ்வாறு தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் தோல்வியை கண்டதால் தமிழருவி மணியன் அரசியல் பேசுவதை நிறத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டு காலம்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து நாளை மறுநாளுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் தேர்தலுக்கு முன்னர் தீவிரம் காட்டிய காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திமுக அரசின் ஓராண்டு கால செயல்பாடுகள் அரசின் திட்டங்கள் பற்றி என்ன கூறுகிறார் என்பதை அறிவதற்காக ஒன் இந்தியா தமிழ் அவரை தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவரது பேச்சில் விரக்தி மட்டுமே வெளிப்பட்டது. அதன் விவரம் வருமாறு,

பகை மட்டுமே மிச்சம்
"ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக பேசி பேசி எனக்கு பகை மட்டுமே மிஞ்சியுள்ளது. எனது வீட்டையும் பார்க்காமல், மக்களையும் பார்க்காமல் எனக்கு கிடைத்த வாழ்க்கை முழுவதையும் விரயம் ஆக்கிவிட்டேன். அதனால் இப்போது மேற்கொண்டு அரசியல் பேச வேண்டும் என நான் விரும்பவில்லை. வாழக் கூடிய நாட்களை நிம்மதியாக கழிக்க வேண்டும் என நினைக்கிறேன். இதனால் புத்தகங்கள் படித்து நேரத்தை செலவிட்டு வருகிறேன்."

அன்புக்கு நன்றி
" இதனால் இப்போது என்னிடம் எதைப்பற்றியும் கேட்காதீர்கள். ப்ளீஸ், உங்க அன்புக்கு நன்றி. இனி மீண்டும் நான் அரசியல் பேசுவேனா என்பது எனக்குத் தெரியாது. காலமும் கடவுளும் எனக்கிட்ட கட்டளை என்னவோ அதன்படி வாழ்ந்துவிட்டு போக வேண்டியது தான். இதனால் திமுக அரசின் ஓராண்டு கால செயல்பாடுகள் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை."

விரக்தி பேச்சு
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விரக்தியின் உச்சியில் இருப்பது மட்டும் நாம் அவரிடம் பேசிய போது உணர முடிந்தது. திமுகவுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வருவதில் அதிக முனைப்பு காட்டியவர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் வாரம் ஒரு நாளாவது ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து அரசியல் ஆலோசனைகள் அளித்து வந்தார் தமிழருவி. கடைசியில் தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவியதோடு எந்தக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது எ ன நினைத்தாரோ அந்தக் கட்சி ஆட்சிக்கும் வந்து வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications