"இதுக்கு எல்லாம் போராடுங்க முதலமைச்சரே".. ஆளுநருக்கு பதில் கொடுத்த ஸ்டாலினுக்கு தமிழிசை ரிப்ளை
சென்னை: "நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரஸோடு நீங்கள் போராட வேண்டும். நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்" என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கொடுத்துள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
திமுகவின் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்து இருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், "தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டுள்ளார்... இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்! அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்" எனப் பட்டியலிட்டு இருந்தார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை.. புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல... நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரஸோடு நீங்கள் போராட வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி.. ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாராபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடுங்கள்... நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்... நீட் எதிர்த்து போராடுவேன் கையெழுத்து விடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்...
#Delimitation.. என்று இன்று இல்லாத ஒன்றை எதிர்த்து போராடுகிறேன் என்பது உங்களது திராவிட மாடல் என்கின்ற பொய் மாடல் .... உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறை வணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா..?
முதலமைச்சரே! மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில் உங்கள் சொந்த தொகுதியிலேயே துப்புரவு தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே அதை எதிர்த்து போராடுங்கள்..
வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக? நீங்களே போராடுங்கள்! .. கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களை பலிவாங்கி.. அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்து போராடுங்கள்... இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...
பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்து போராடுங்கள்.. திராவிட மாடல் ஆட்சியில்
இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்து போராடுங்கள்..
ஒரு வானூர்தி சாகசத்தில் கூட பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறையை எதிராக போராடுங்கள்... ஒரு அரசியல் கட்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கை எதிராக போராடுங்கள்... இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்..." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications