அதென்ன, டாக்டர் தமிழிசைக்கு இவ்வளவு கோபம்.. ஆச்சரியமா இருக்கே!
Recommended Video
சென்னை: இப்போது வரை தமிழக மக்களால் வெறுக்க முடியாத தலைவராக திகழும் தமிழிசை சவுந்தராஜனா இப்படியெல்லாம் பேசுவது என்பது ஆச்சரியமாக உள்ளது!
சின்ன வயசில் இருந்தே தமிழக அரசியல் தலைவர்களை பார்த்து வளர்ந்தவர் தமிழிசை. பாரம்பரியமான பின்னணி, பெற்றோரின் சீரிய வளர்ப்பு, நாகரீகம் குறையாமல் பேசும் தன்மை, வார்த்தை கட்டுப்பாடுகள், எதையும் பொறுமையுடன் அணுகும் பின்னணி.. இதுதான் தமிழகம் பார்த்து வந்த தமிழிசை.
ஆனால் இப்போது இவருக்கு என்ன ஆச்சு? கேட்டபடி 5 சீட் தந்து விட்டார்கள். ஆனால் தோற்று போனது யார்? எதற்காக தோற்று போனார்கள்? இதெல்லாம்தானே பாஜக மாநில தலைமை ஆராய வேண்டும்? அதைவிட்டுவிட்டு, வெற்றி பெற்றவர்களை பார்த்து எகத்தாளமாக பேசுவது எந்த விதத்தில் நியாயம்?
முக ஸ்டாலின்
பாஜகவை தோற்கடித்த அதே மக்கள்தான் திமுகவையும் வெற்றி பெற வைத்துள்ளார்கள். இன்று 37 பேரும் ஏகமனதாக ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போகிறவர்கள் கிடையாது. ஆனால் அவர்களை காதறுந்த ஊசிகள் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
|
தேவைகள்
இன்று தமிழிசை சவுந்தராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது இதுதான்: "காதறுந்த ஊசிகள்? தைக்கப்பயன்படுமா? குத்திப்பார்க்கலாம்? அவ்வளவுதான்? இதுதான் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களின் நிலைமை.? குரல் கொடுக்கலாம்? வெளிநடப்பு செய்யலாம்? கோரிக்கை மனு கொடுத்து படம் காட்டலாம்? அவ்வளவே ஆணையிடும் அதிகாரம் யாரிடம்? இருந்தாலும் தமிழகத்தின் தேவைகளை பாஜக நிறைவேற்றும்" என்று பதிவிட்டுள்ளார்.
காதறுந்த ஊசிகள்
முதலில், 37 பேரும் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதே தெரியாமல் தமிழசை இப்படி சொல்ல கூடாது. இரண்டாவதாக, இவர்கள் அனைவரும் மக்களின் பிரதிநிதிகள். அதனால் காதறுந்த ஊசிகள் என்ற வார்த்தை மக்களை கொச்சைப்படுத்துவது. மூன்றாவதாக, வெளிநடப்புதான் செய்யலாம் என்றால், அப்படி தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை ஏதேனும் பாஜக கொண்டு வரப்போகிறதா என தெரியவில்லை.
மாநில வளங்கள்
நான்காவது, தமிழகத்து தேவைகளை பாஜக நிறைவேற்றும் என்பதே தவறான கருத்து. எதையும் நிறைவேற்றவில்லை என்றாலும் பரவாயில்லை, இங்க இருக்கிற வளங்களை கொள்ளை அடிக்காமல் இருந்தாலே போதும். அது மட்டுமில்லை, அதிகமாக வரி செலுத்தும் மாநிலம் தமிழகம்தான். அப்படி இருக்கும்போது, பாஜக என்ன தமிழகத்துக்கு பிச்சை போடுவது?
தவறான கட்சி
ஐந்தாவது, சொந்த மாநிலத்தில் தன் கட்சி தோற்று போனதற்கு வழியை தேடி, கட்சியை தமிழகத்தில் காப்பாற்றி கொள்வதைவிட்டு, ஜெயித்தவர்களை பார்த்து பொருமுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. கட்சியில் வாஜ்பாய் எப்படி இருந்தாரோ, அந்த மாதிரி தமிழிசையை தமிழகம் மனதில் கோட்டை கட்டி வைத்துள்ளது. தவறான கட்சியில் ஒரு நல்ல நபர் என்ற பெயரை தமிழிசை வைத்துள்ளார்.
உணர்வார்களா?
ஏற்கனவே மக்கள் கடுப்பிலும், அதிருப்தியிலும் உள்ளபோது, இப்படியெல்லாம் பேசுவது பாஜகவுக்குதான் மேலும் சரிவை தரும்! நாம் தோற்று போனாலும், அகில இந்திய அளவில் தமிழகம் எந்த விதத்திலும் தோற்றுவிடக்கூடாது, உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற மனோபாவம் தேவைப்படுகிறது. தோற்கடித்த மக்களை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களுடனான நெருக்கத்தை மேலும் வளர்த்து கொள்ள வேண்டி உள்ளது. இதை தோற்று போன 5 பேருமே உணர்வது அவசியம்!