ஆளுநர் ‘வாரிசு’ பதவியில்லை.. கவர்னர் பதவி என்பதே காலாவதியானதா? கனிமொழியால் கடுப்பான தமிழிசை!
சென்னை :ஆளுநர் ஆர் என் ரவி குறித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழியின் கருத்துக்கு முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் பல்கலைக் கழக நிகழ்வுகளில் வேந்தர் என்ற முறையில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் சனாதானம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக களமிறங்கியுள்ளன.

ஆர்.என்.ரவி
திமுக மட்டுமல்லாது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கைகள் கண்டனங்கள் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கூட்டணி கட்சிகள் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. ஆளுநர் ரவி பாஜக தலைவர் போல நடந்து கொள்வதாகவும் அவரை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

கடுமையான குற்றச்சாட்டு
தே நேரத்தில் இந்த விவகாரங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஆர்.என்.ரவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழக நிகழ்ச்சிகள், பட்டமளிப்பு விழாக்கள், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் தொடர்ந்து இந்தியா குறித்தும், இந்து மதம், சனாதனம், பாரதம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ஆளுநர் செயல்பட்டு வருவதாக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கனிமொழி எம்பி
தற்போது தமிழக விவகாரங்களிலும் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் தலைகாட்டி வருகிறார். ஏற்கனவே தெலுங்கானா புதுச்சேரி மாநில ஆளுநராக இருக்கும் அவர் தமிழக விவகாரங்கள் குறித்தும் தமிழக ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆளுநர் ரவி விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகள் நேரம் கேட்டிருப்பதாக கனிமொழி கூறியிருந்தார். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான். கவனர் பதவி என்பது தேவையே இல்லாத ஒன்று. அதை புரிந்துகொண்டு ஆளுநர் பதவியை ரத்து செய்தால் பல சிக்கல்கள் இருக்காது என பேசியிருந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்
இந்நிலையில் கனிமொழியின் கருத்துக்கு முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"நாட்டில் பிரிவினை பேசுவதாக கூறிய இராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று ஒரு இயக்கைத்தை சேர்ந்தவர்கள் மிரட்டி துன்புறுத்தி உள்ளனர். இது தேசப்பற்றை குலைக்கும் செயல். ஆளுநராக இருந்தால் கூட, நான் தேசபற்று உடையவர் என்பதால் இந்த கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. .

ஆளுநர் காலாவதியானவர்
தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கருத்து சொல்வதை திமுக எம்.பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்க கூடாது என்கிற எண்ணம் பல பேருக்கு உண்டு. கருத்து கூறலாம். ஆனால் மிக மோசமான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications